IND vs ENG: கேப்டனாக முதல் அரைசதம்.. ஸ்ரேயாஸ், அபிஷேக் அதிரடியால் இந்தியா பேட்டிங்கில் அபாரம்
துர்ஹாம்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று விறுவிறுப்பாகத் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான வருண் சக்கரவர்த்தி மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இளம் பேட்டிங் வீரரான வைபவ் சூர்யவன்ஷிக்கு விளையாடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் 1 ரன்னில் வெளியேற, இசான் கிஷன் ரன் அவுட் ஆனார். இதனால் இந்திய அணி 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களத்தில் ஸ்ரேயாஸ் ஐயர், அபிணேக் சர்மா ஜோடி இங்கிலாந்து பந்தவீச்சை தைரியமாக எதிர்கொண்ட கவுண்டர் அட்டாக் இன்னிங்சில் ஈடுபட்டது.

பவுண்டரி, சிக்சர் என விரட்டிய அபிஷேக் சர்மா 20 பந்துகளில் அரைசதம் அடித்தார். அபிஷேக் 59 ரன்களில் வெளியேற, ஸ்ரேயாஸ், திலக் வர்மா ஜோடி பொறப்பாக விளையாடினர். திலக் வர்மா தன் வேகத்தை கூட்ட முயன்ற போது13 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த தருணத்தில் தான் ஸ்ரேயாஸ் ஐயர் தனது கேப்டன் இன்னிங்சை வெளிப்படுத்தி அதிரடி காட்டி, தனது 9வது சர்வதேச டி20 அரைசதத்தை கடந்தார். மறுபுறம் சிவம் துபே இன்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்ற அவர், 17.5 ஓவரில் சாகிப் மஹ்மூத்தின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ (LBW) முறையில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி உடனடியாக ரிவியூ செய்ததில் அவர் விக்கெட்டை இழந்தது உறுதியானது. கேப்டன் ஆட்டமிழந்த பிறகு அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்த சிவம் துபே, இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை திணறடித்தார். குறிப்பாக சாம் கர்ரன் வீசிய 19.4 ஓவரில் அவர் அடித்த அசாத்திய சிக்சர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
அவர் 21 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். மற்றொரு முனையில் களமிறங்கிய ஹர்ஷித் ராணா, அடில் ரஷீத் வீசிய கூக்ளி பந்தில் ஜோஸ் பட்லரால் ஸ்டம்பிங் செய்யபட்டு ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் சாகிப் மஹ்மூத் 4 ஓவர்கள் வீசி 33 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அடில் ரஷீத் தனது 4 ஓவர்களில் 39 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். இறுதி ஓவர்களின் போது மைதானத்தில் லேசான மழை தூறல் இருந்தது. இந்திய அணி தனது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications

