நாக்பூர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் இந்திய அணியின் ஃபீல்டிங் என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தபோது அந்த அணியின் துவக்க வீரர்கள் ஃபில் சால்ட் மற்றும் பென் டக்கெட் அதிரடியாக ஆடி வந்தனர்.
அவர்கள் இருவரும் இணைந்து 9 ஓவர்களுக்கு உள்ளாகவே 75 ரன்களை சேர்த்து இருந்தனர். ஃபில் சால்ட் அதிரடியாக ஆடி 26 பந்துகளில் 43 ரன்களை சேர்த்து இருந்தார். 5 ஃபோர் மற்றும் 3 சிக்ஸர்களை விளாசி இருந்தார். அப்போது ஹர்திக் பாண்டியா வீசிய 9வது ஓவரில் ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக செய்த ஃபீல்டிங் காரணமாக ஃபில் சால்ட் ஆட்டம் இழந்தார்.

அப்போது ஃபில் சால்ட் அடித்த பந்தை பிடிக்க நீண்ட தூரம் ஓடினார் ஸ்ரேயாஸ் ஐயர். பந்து பவுண்டரி எல்லைக்கு சில அடி தூரம் வரை சென்றபோது ஸ்ரேயாஸ் ஐயர் பந்தை தடுத்தார். அப்போது இங்கிலாந்து அணியின் ஃபில் சால்ட் மற்றும் பென் டக்கெட் இரண்டு ரன்கள் ஓடி இருந்தனர். ஃபில் சால்ட் மூன்றாவது ரன் ஓட நினைத்தார்.
ஆனால், அப்போது ஸ்ரேயாஸ் ஐயர் பந்தை வேகமாக விக்கெட் கீப்பர் ராகுல் வசம் வீசினார். ஸ்ரேயாஸ் வேகமாக பந்தை எறிவதை கவனிக்காத பென் டக்கெட், ஓடி வராததால் ஃபில் சால்ட் ரன் அவுட் செய்யப்பட்டார். ஒருவேளை ஸ்ரேயாஸ் ஓரிரு வினாடிகள் தாமதித்து பந்தை எடுத்து வீசி இருந்தாலும் இந்த ரன் அவுட்டை இங்கிலாந்து அணி தவிர்த்து இருக்கக்கூடும்.
அந்த வகையில் ஸ்ரேயாஸ் ஐயரின் வேகமான
பீல்டிங் முதல் விக்கெட்டை இந்திய அணிக்கு பெற்றுத் தந்தது. அதிலும் இங்கிலாந்து அணியிலேயே அதிரடியாக ஆடிய ஒரே பேட்ஸ்மேன் ஃபில் சால்ட் மட்டுமே. அவரது விக்கெட்டை இந்தியா இதன் மூலம் கைப்பற்றியது.
அடுத்த ஓவரிலேயே ஹர்ஷித் ராணா பந்து வீச்சில் பென் டக்கெட் ஆட்டம் இழந்தார். அப்போது டக்கெட் அடித்த பந்தை ஜெய்ஸ்வால் அற்புதமாக டைவ் அடித்து கேட்ச் பிடித்து இருந்தார். பந்து எந்த திசையில் வருகிறது என்று பார்க்க முடியாத ஒரு கோணத்தில் தான் ஜெய்ஸ்வால் ஓடிக்கொண்டு இருந்தார். தனது உள்ளுணர்வின் மூலம் பந்து விழும் இடத்தை சரியாக கணித்து ஜெய்ஸ்வால் பாய்ந்தார்.
சரியாக பந்து அவரது கைகளில் தஞ்சம் அடைந்தது. இதன் மூலம் 29 பந்துகளில் 32 ரன்கள் எடுத்திருந்த பென் டக்கெட் விக்கெட்டையும் இந்திய அணி வீழ்த்தியது. அதன் பின் இந்திய அணி வரிசையாக விக்கெட்களை வீழ்த்தியது. இடையே ஜோஸ் பட்லர் 52 ரன்கள், ஜேக்கப் பெத்தேல் 51 ரன்கள் எடுத்து இருந்தனர்.
ஆனாலும், விக்கெட் சரிவை அவர்களாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. இங்கிலாந்து அணி 47.4 ஓவர்களில் 248 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணி குறைந்த ரன்களை எடுத்த போதே இந்திய அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அடுத்த இந்திய அணி பேட்டிங் செய்த போது சுப்மன் கில் 87 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 59 ரன்களும், அக்சர் பட்டேல் 52 ரன்களும் எடுத்தனர்.
இந்திய அணி 38.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஜெய்ஸ்வால் ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு இங்கிலாந்து அணியின் அதிரடி துவக்கத்தை முடக்கியதே முக்கிய காரணமாக அமைந்தது.
அதன் பின் மற்ற இந்திய வீரர்கள் தங்கள் பணியை சரியாக செய்ததன் மூலமே இந்திய அணி எளிதாக வென்று விட்டது. பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா மூன்று விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ராணா மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.