IND vs ENG: இதான் டா கேப்டன் இன்னிங்ஸ்.. தனி ஆளாக இந்திய அணியை கரை சேர்த்த ஸ்ரேயாஸ் ஐயர்
பிரிஸ்டல்: இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி துவக்கத்தில் விக்கெட்களை இழந்து தவித்தது. அப்போது கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தனி ஆளாக நின்று ஆடி அரைசதம் கடந்து ரன் குவித்தார். அவரது ஆட்டத்தால் இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது.
பிரிஸ்டலில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கிய இந்திய அணிக்கு மீண்டும் ஒரு டாப் ஆர்டர் சரிவு ஏற்பட்டது. துவக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி 15 ரன்களிலும், அபிஷேக் சர்மா 16 ரன்களிலும், விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் வெறும் 4 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். பவர்பிளேயில் இந்திய அணி 44 ரன்கள் மட்டுமே எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

இந்திய அணி 48 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் தவித்த போது, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அணியை மீட்கும் பொறுப்பைத் தனது தோள்களில் சுமந்தார். மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளைச் சிதறடித்த அவர், இங்கிலாந்து பந்துவீச்சை துவம்சம் செய்தார். அவர் 49 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 5 இமாலய சிக்ஸர்களுடன் 80 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
அவருக்கு ஓரளவிற்கு ஆதரவாக விளையாடிய சிவம் துபே 23 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இவர்கள் இருவரும் இணைந்து 4-வது விக்கெட்டுக்கு 53 ரன்கள் சேர்த்து அணியை மீட்டெடுத்தனர். அதன் பிறகு வந்த திலக் வர்மா 11 ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் 5 ரன்களிலும், அக்சர் படேல் 1 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.
இங்கிலாந்து பந்துவீச்சாளர்களில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளையும், ஜோஷ் டங் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். கடந்த 5 போட்டிகளில் ஒரு வெற்றி கூட பெறாத இந்திய அணிக்கு, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் இந்த ஆட்டம் மிகப்பெரிய நம்பிக்கையாக அமைந்தது.


Click it and Unblock the Notifications
