மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் 5 சதம் அடிக்கப்பட்டும் தோல்வியை தழுவியிருப்பது தான் ரசிகர்களை கோபமடைய செய்திருக்கிறது. இதற்கு காரணம் இந்திய அணியின் கீழ் வரிசை வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்பதுதான்.
கருண் நாயர் மீது பெரும் நம்பிக்கை தேர்வுக் குழுவினரால் வைக்கப்பட்டது. ஆனால் அவர் அதனைக் காப்பாற்றவில்லை இந்த சூழலில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஸ்ரேயாஸ் அபாரமாக செயல்பட்டதை குறிப்பிட்ட ரசிகர்கள், ஐபிஎல் தொடரிலும் அணியை சிறப்பாக இறுதிப் போட்டி வரை வழி நடத்தியதை பாரட்டியுள்ளனர். இதனால், ரசிகர்கள் டெஸ்ட், ஒருநாள், டி 20 என மூன்று கிரிக்கெட்டிலும் இடம்பெற வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
எனினும் இது முடியாத காரியம் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர்," தற்போது பேட்டிங்கில் எந்த சிக்கலும் இல்லை என்று தான் நான் நினைக்கின்றேன். ஸ்ரேயாஸ் அணியில் இடம்பெற வேண்டும் என்றால் அவருக்கான வாய்ப்பு கிடைக்கும் வரை ஸ்ரேயாஸ் பொறுத்து இருந்தாக வேண்டும்."
"நேரடியாக அவருக்கு இனி வாய்ப்பு கிடைப்பது கடினம். இங்கிலாந்து தொடரில் ஸ்ரேயாஸ்க்கு நிச்சயம் வாய்ப்பு கிடைத்திருக்காது. ஏனென்றால் தற்போது அணியில் இருப்பவர்களுக்கே இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை. கருண் நாயருக்கே இப்போதுதான் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்."
"இதுபோன்று ஸ்ரேயாஸ் காலுக்கும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. ஏற்கனவே துருவ் ஜுரல் வாய்ப்புக்காக அணிக்கு வெளியே காத்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே இருக்கும் வீரர்களுக்கு வாய்ப்பு இல்லாத சூழலில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு எப்படி வாய்ப்பு கிடைக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்."
"சொல்லப் போனால் ஸ்ரேயாஸ் ஐயருக்கு முதல் தர கிரிக்கெட் போட்டிகள் நல்ல விதமாக தான் இந்த ஆண்டு அமைந்தது.ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். கண்டிப்பாக அவருக்கான நேரம் வரும். ஆனால் அதற்கு கொஞ்சம் அவர் காத்திருக்க வேண்டும்" என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். ஸ்ரேயாஸ், இதுவரை 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 811 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஒரு சதம், ஐந்து அரை சதம் அடங்கும்.