லண்டன்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வரும் டெஸ்ட் தொடரில், இந்திய அணியின் புதிய கேப்டனாக இருக்கும் சுப்மன் கில் தற்போது "தேனிலவு" காலத்தில் இருப்பதாகவும், விரைவில் அவருக்கு அழுத்தம் அதிகரிக்கும் என்றும் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோருக்கு அடுத்தபடியாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டு இருக்கிறார். பும்ரா, ரிஷப் பந்த் என அவருக்கு முன்பாக இந்திய அணியின் கேப்டன் ஆகும் தகுதியுடைய வீரர்கள் இருந்தும், சுப்மன் கில்லுக்கு கேப்டன் பதவி அளிக்கப்பட்டிருக்கிறது.

25 வயதான அவர் இதுவரை இரண்டு போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி, அதில் ஒரு வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார். மேலும், கேப்டன் பதவியைப் பெற்ற பிறகு அவரது பேட்டிங் பன்மடங்கு முன்னேறி இருக்கிறது. இந்த இரண்டு போட்டிகளில் மட்டுமே அவர் 585 ரன்கள் சேர்த்து மிரள வைத்திருக்கிறார். மேலும், இங்கிலாந்து மண்ணில் இளம் கேப்டனாக இந்திய அணிக்கு வெற்றியைத் தேடி கொடுத்திருக்கிறார்.
இந்த நிலையில், முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி அவரைப் பற்றி தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். "சுப்மன் கில் ஆடுவதிலேயே இதுதான் சிறந்த ஆட்டம் என்பதாகப் பார்க்கிறேன். ஆனால் இது குறித்து நான் ஆச்சரியப்படவில்லை. அவரது செயல்பாடு அபாரமானதாக இருந்தது. அவரது கிரிக்கெட் வாழ்வு புதிய திசையை நோக்கி செல்லும் என்று நம்புகிறேன்.
சுப்மன் கில் நீண்ட நாள் நல்ல பேட்ஸ்மேனாக இருப்பார். இப்போதுதான் கேப்டனாக ஆகியிருக்கிறார். இது அவருக்கு தேனிலவு காலம். இனி வரும் நாட்களில் அவருக்கு அழுத்தம் அதிகரிக்கும். இங்கிலாந்து தொடரின் அடுத்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் அவருக்கான அழுத்தம் அதிகரித்துக் கொண்டே செல்லும்" என்று சௌரவ் கங்குலி எச்சரித்து இருக்கிறார்.
மேலும், இந்திய அணியில் மூத்த வீரர்கள் இல்லாதபோதும் அடுத்த தலைமுறை வீரர்கள் அவர்களது இடங்களை நிரப்பி இருக்கிறார்கள் என சுட்டிக்காட்டினார் கங்குலி. "நான் சமீபத்தில் கூட இது பற்றி பேசியிருந்தேன். இந்திய கிரிக்கெட்டில் ஒவ்வொரு தலைமுறையிலும் நல்ல வீரர்கள் இருப்பார்கள். எப்போதெல்லாம் அங்கு வெற்றிடம் உருவாகிறதோ, அதை நல்ல வீரர்கள் வந்து நிரப்புவார்கள். இந்திய கிரிக்கெட்டில் அதிக திறமையாளர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு தலைமுறையிலும் நாம் அப்படிப்பட்ட வீரர்களை அடையாளம் காண முடியும்.
சுனில் கவாஸ்கர், கபில் தேவ் ஆகியோருக்குப் பிறகு சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே ஆகியோர் வந்தனர். அவர்களுக்குப் பிறகு விராட் கோலி வந்தார். இப்போது சுப்மன் கில், ஜெய்ஸ்வால், ஆகாஷ் தீப், முகேஷ் குமார், முகமது சிராஜ் என நிறைய திறமையாளர்கள் இருக்கின்றனர்" என்று சௌரவ் கங்குலி குறிப்பிட்டார்.