பிர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், கேப்டன் சுப்மன் கில் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். இந்தப் போட்டியில் ஆகாஷ் தீப் பத்து விக்கெட்டுகளை வீழ்த்தியதால், அவருக்கு ஆட்டநாயகன் விருது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இருப்பினும், இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 430 ரன்கள் குவித்த சுப்மன் கில்லுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. மேலும், இதுவே கேப்டனாக அவருக்குக் கிடைத்த முதல் வெற்றியாகவும் அமைந்தது. மேலும், ஒரே டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து அதிக ரன் குவித்த இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார் சுப்மன் கில்.

இந்தப் போட்டியில் சுப்மன் கில் முதல் இன்னிங்க்ஸில் 269 ரன்களும், இரண்டாவது இன்னிங்க்ஸில் 161 ரன்களும் சேர்த்து இருந்தார். அவரது ரன் குவிப்பால் இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு 608 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயம் செய்தது. ஆகாஷ் தீப் முதல் இன்னிங்க்ஸில் 4 விக்கெட் வீழ்த்திய நிலையில், இரண்டாவது இன்னிங்க்ஸில் 6 விக்கெட்கள் வீழ்த்தினார். இதை அடுத்து இந்திய அணி 336 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.
இந்த வெற்றியைக் குறித்தும், தனது பேட்டிங் குறித்தும் அவர் பேசினார்: "முதல் போட்டியின் முடிவில் நாம் பேசிய அனைத்து பலவீனமான விஷயங்களிலும் இப்போது நாங்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறோம். எங்கள் பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் அற்புதமாக இருந்தது. இந்த மைதானத்தில் 400 அல்லது 500 ரன்கள் எளிதாக எட்டலாம் என்று நினைத்தோம். அதை நாங்கள் செய்தோம்.
நாங்கள் எப்போதும் முதல் டெஸ்ட்டில் செய்ததைப் போல கேட்ச்களை நழுவ விட்டுக் கொண்டே இருக்க மாட்டோம். வேகப்பந்துவீச்சாளர்கள் இந்தப் போட்டியில் அற்புதமாக செயல்பட்டனர். அவர்களது டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை எங்களால் எளிதாக வீழ்த்த முடிந்தது. அதுதான் மிகவும் முக்கியமானதாகவும் இருந்தது.
சிராஜ், ஆகாஷ் தீப் மட்டும் இல்லாமல், பிரசித் கிருஷ்ணாவும் நன்றாக பந்து வீசினார். அவர் விக்கெட் வீழ்த்தவில்லை என்றாலும், அற்புதமாக பந்து வீசினார். ஆகாஷ் தீப் சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்து வீசினார். பந்தை இரண்டு பக்கமும் ஸ்விங் செய்தார். இந்த மைதானத்தில் அவ்வாறு பந்து வீசுவது மிகவும் கடினம்," என்று கேப்டன் சுப்மன் கில் கூறினார்.