ராஞ்சி : இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் சுப்மன் கில் இரண்டாவது இன்னிங்ஸ் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக உருவாகியுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு பின் இந்திய அணியின் நம்பர் 3 பேட்ஸ்மேனாக களமிறக்கப்பட்டு வந்தார் சுப்மன் கில். தொடர்ச்சியாக 11 இன்னிங்ஸ்களில் அரைசதம் கூட அடிக்க முடியாமல் திணறிய சுப்மன் கில், இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் சதம் விளாசி தரமான கம்பேக்கை கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டான சுப்மன் கில், இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமான விளையாடி 91 ரன்களை சேர்த்தார். சதம் மிஸ்ஸானாலும் பேட்டிங் ஃபார்மை சுப்மன் கில் நிரூபித்துள்ளார். தொடர்ந்து ராஞ்சி மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சுப்மன் கில் 38 ரன்களில் ஆட்டமிழந்து இந்திய அணியின் வீழ்ச்சிக்கு தொடக்கமாக அமைந்தார்.
ஆனால் 4வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் 37 ரன்களில் ஆட்டமிழந்த பின், அடுத்தடுத்து இந்திய அணியின் 4 பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களுக்கு வெளியேறினர். ஆனால் எந்த பதற்றமும் இல்லாமல் சுப்மன் கில் கடைசி வரை பவுண்டரி அடிக்காமல் அரைசதம் விளாசியுள்ளார். எந்த ரிஸ்கும் எடுக்காமல் கடைசி வரை இந்திய அணியின் பக்கம் ஆட்டம் திரும்புவதற்காக காத்திருந்தது ரசிகர்களிடையே பாராட்டப்பட்டு வருகிறது.
காபா டெஸ்ட் போட்டியை சேர்த்து பார்த்தால், இந்திய அணியின் 2வது இன்னிங்ஸ் ஸ்பெஷலிட்ஸ்ட்டாக சுப்மன் கில் உருவெடுத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் சேஸிங் செய்வதில் சொதப்பி வந்த நிலையில், சுப்மன் கில்லின் விஸ்வரூபம் இந்திய அணிக்கு அரணாக உள்ளது. இதன் மூலம் இனி இந்திய அணியின் நம்பர் 3 வரிசையில் புஜாரா தேவையில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளில் விளையாடியுள்ள சுப்மன் கில் ஒரு சதம், 2 அரைசதம் உட்பட 342 ரன்களை விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.