லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியதற்கு வீரர்களின் அனுபவமின்மையே காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. லண்டன் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் கொஞ்சம் ஆக்ரோஷமாக நடந்துகொண்டார்கள். இப்படி ஆக்ரோஷமாக நடந்துகொண்டால் எப்படியாவது கண்டிப்பாக வெற்றி பெற்றுவிட வேண்டும்.
இல்லை என்றால் நிச்சயம் எதிரணி ரசிகர்களிடமிருந்து உதைதான் கிடைக்கும். உதாரணத்திற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் இதைவிடப் பல திமிராக நடந்துகொள்வார்கள். ஆனால் வாய் மட்டும் அவர்களிடம் பேசாது. கையில் பேட்டும் பந்தும் பேசும். திமிராக நடந்துகொள்வது மட்டுமல்லாமல் கண்டிப்பாக வெற்றியும் பெற்றுவிடுவார்கள்.

ஓர் உதாரணத்திற்கு 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன் ஒரு லட்சம் இந்திய ரசிகர்களை அமைதியாக்குவதுதான் எங்களுடைய முதல் பணி என்று கம்மின்ஸ் கூறினார். கூறியது மட்டுமல்லாமல் அதைச் செய்தும் காட்டினார். ஆனால் நமது வீரர்கள் வாய் மட்டுமே பேசினார்கள் தவிர களத்தில் பேட்டிங்கில் சொதப்பிவிட்டார்கள். இதுவே விராட் கோலி களத்தில் இருந்திருந்தால் நிச்சயம் இதைவிடப் பயங்கரமாகச் சண்டை போட்டிருப்பார்.
ஆனால் அதே கோபத்தைத் தனது பேட்டிலும் காண்பித்து, "என்னை ஏமாற்ற நினைத்தாயே, இதற்காகவே நான் உன்னை வீழ்த்துவேன்" என்ற நம்பிக்கையுடன் விளையாடியிருப்பார். ஆனால் கில் விராட் கோலியைப் போல் நான் ஆக்ரோஷமாக களத்தில் இருப்பேன் என்பதை மட்டும்தான் காண்பித்தார் தவிர வேறு எதையும் செய்யவில்லை. கேப்டனாக கில் முழு பொறுப்பையும் எடுத்துக்கொண்டு 193 ரன்கள் எடுப்பதற்குத் தனி ஆளாகப் போராடியிருக்க வேண்டும்.
விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் நிச்சயம் அதைத்தான் செய்திருப்பார்கள். இல்லை என்றால் புஜாரா போன்ற அனுபவ வீரர்கள் இந்த இலக்கை அல்வா சாப்பிடுவது போல் எட்டியிருப்பார்கள். ஏனென்றால் இது போன்ற நெருக்கடியான கட்டத்தில் எப்படி விளையாட வேண்டும், எப்படிப் பந்துகளை எதிர்கொள்ள வேண்டும், எதிரணியின் வீரர்களை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்று அந்த வீரர்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே அனுபவமின்மையும் ஆட்டத்தின் சூழலைச் சரியாகக் கையாளாமல் விட்டது தான் இந்தியாவின் தோல்விக்குக் காரணம் ஆகும்.