மான்செஸ்டர்: இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 544 ரன்கள் எடுத்திருப்பது கிரிக்கெட் விமர்சகர்களை கடுப்படைய செய்திருக்கிறது. இந்திய அணியின் கேப்டன் கில் செய்யும் தவறுதான் இதற்கு காரணம் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.
குறிப்பாக தமிழக கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் 19 ஓவர் வீசி 57 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். ஆனால் ஆட்டத்தின் 69 வது ஓவரில்தான் வாஷிங்டன் சுந்தர் முதல் ஓவரை வீசினார்.

இதனால் பலரும் வாஷிங்டன் சுந்தரை ஏன் இவ்வளவு தாமதமாக கில் பயன்படுத்தினார் என்று கேள்விகளை கேட்டு வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர், இதுபோன்ற முடிவுகள் எல்லாம் கில் தனியாக தான் எடுக்கிறாரா என்று எனக்கு கேள்வி எழுகின்றது.
ஏனென்றால் இவ்வளவு ஆரம்ப காலத்தில் சில சீனியர் வீரர்கள் தங்களுடைய அறிவுரைகளை வழங்குவார்கள். ஒரு பேட்டராக இந்த தொடரில் கில் சிறப்பாக செயல்பட்டு இருக்கின்றார். இதன் காரணமாக கில் கேப்டனாக தனித்துவத்தை பெற்று விட்டார். இனி நாம் எதுவும் சொல்லக்கூடாது என்று நினைத்து விட்டார்களோ என்று எனக்குத் தோன்றுகிறது.
ஏனென்றால் இது போல் ஒரு நகர்வை யாரும் ஆதரிக்க மாட்டார்கள். பும்ரா, ராகுல் அல்லது கம்பீர் யாரும் வாஷிங்டன் சுந்தர் ஆரம்ப கட்டத்தில் பந்து வீசக்கூடாது என்று நினைக்க மாட்டார்கள் என்று சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறியுள்ளார். கில் இப்படி நிறைய தவறுகளை செய்து வருவதால் அவர் கேப்டனாக சரியான தேர்வாக இருப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதன் காரணமாக கேப்டனாக இந்த டெஸ்டில் செய்த தவறில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்சில், பெரிய ஸ்கோர் அடித்தால் மட்டுமே அது நடக்கும். இல்லை என்றால் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் கேள்விகளை சந்திக்கும் நெருக்கடி கில்லுக்கு ஏற்படும்.