லண்டன்: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில், தனது அபாரமான பேட்டிங் ஃபார்மைத் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி, கிரிக்கெட் உலகின் மாபெரும் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர்ரின் 47 ஆண்டுகால சாதனையை முறியடித்து வரலாறு படைத்துள்ளார். ஒரு டெஸ்ட் தொடரில் இந்திய கேப்டனாக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற புதிய மைல்கல்லை அவர் எட்டியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது. மேகமூட்டமான சூழல் காரணமாக, டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் தற்காலிக கேப்டன் ஓலி போப், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். தொடர்ச்சியாக 15வது முறையாக இந்திய அணி டாஸ் இழந்தது குறிப்பிடத்தக்கது.
முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2 ரன்களில் அட்கின்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, நிதானமாக விளையாடிய கே.எல். ராகுல் 14 ரன்கள் எடுத்த நிலையில் கிறிஸ் வோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால், இந்திய அணி 38 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
நெருக்கடியான நிலையில், கேப்டன் சுப்மன் கில், சாய் சுதர்சனுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடி அணியைச் சரிவிலிருந்து மீட்டது. குறிப்பாக, சுப்மன் கில் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களைச் சேர்த்தார்.

இந்த போட்டியின் போது, 11 ரன்களைக் கடந்த சுப்மன் கில், ஒரு டெஸ்ட் தொடரில் இந்திய கேப்டனாக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இதற்கு முன்பு, 1978-79ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சுனில் கவாஸ்கர் 6 போட்டிகளில் 732 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. இந்தத் தொடரில் இதுவரை 9 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள கில், 4 சதங்களுடன் 737 ரன்களுக்கு மேல் குவித்து இந்தச் சாதனையை முறியடித்துள்ளார்.
இந்த பட்டியலில், விராட் கோலி 2016/17ல் இங்கிலாந்துக்கு எதிராக 655 ரன்களுடனும், 2017ல் இலங்கைக்கு எதிராக 610 ரன்களுடனும், 2018ல் இங்கிலாந்துக்கு எதிராக 593 ரன்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். சுப்மன் கில் தற்போது இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராகவும் திகழ்கிறார்.
இந்திய அணி முதல் செஷனின் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்திருந்தபோது, மழை குறுக்கிட்டது. இதனால், மதிய உணவு இடைவேளை முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து பெய்த கனமழையால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. கில் 15 ரன்களுடனும், சாய் சுதர்சன் 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.