லண்டன்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில், இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் மற்றும் இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராலி இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கிராலியின் நேரத்தை வீணடிக்கும் செயலால் கோபமடைந்த கில், மைதானத்தில் அவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்தச் சம்பவம் குறித்துக் கருத்து தெரிவித்த இங்கிலாந்து முன்னாள் வீரர் ஜொனாதன் ட்ராட், சுப்மன் கில்லின் ஆக்ரோஷமான நடத்தை முன்னாள் இந்திய கேப்டன் ஒருவரைப் போல் இருப்பதாக சூசகமாக விமர்சித்தார். இதற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தின் கடைசி ஓவரில் இந்த அனல் பறக்கும் மோதல் அரங்கேறியது. ஆட்டம் முடிய சில நிமிடங்களே இருந்த நிலையில், இந்திய அணி இரண்டு ஓவர்களை வீச திட்டமிட்டிருந்தது. ஆனால், இங்கிலாந்து தொடக்க வீரர் ஜாக் கிராலி, நேரத்தைக் கடத்தும் நோக்கில், பந்துவீச்சை எதிர்கொள்ள நீண்ட நேரம் எடுத்துக்கொண்டார். மேலும், ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச ஓடி வந்தபோது இரண்டு முறை தடுத்தார்.

இதனால் ஆத்திரமடைந்த சுப்மன் கில், கிராலியை நோக்கிச் சென்று கடுமையான வார்த்தைகளால் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில், காயம் ஏற்பட்டது போல் நடித்த கிராலியை நோக்கி 'இம்பாக்ட் பிளேயர்' சின்னத்தை கில் காட்டினார். அவரை வெளியேற்றி விட்டு மாற்று வீரரைக் ஆட வைக்கலாம் என கிண்டல் செய்வதாக அமைந்தது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், சக வீரர்கள் மற்றும் அம்பயர்கள் தலையிட்டு சூழ்நிலையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய ஜொனாதன் ட்ராட், சுப்மன் கில்லின் நடத்தை எல்லை மீறிய ஆக்ரோஷத்துடன் இருந்ததாகவும், இது ஒரு முன்னாள் இந்தியக் கேப்டனின் செயல்பாடுகளை நினைவுபடுத்துவதாகவும் மறைமுகமாக விராட் கோலியைச் சாடினார். ஒரு கேப்டனாக கில் நிதானத்தைக் கடைப்பிடித்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ட்ராட்டின் இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த அனில் கும்ப்ளே, "இங்கிலாந்து அணி ஒரு ஓவரைக் கூட எதிர்கொள்ள விரும்பவில்லை என்பது போல்தான் தோன்றியது," என்று குறிப்பிட்டார். ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் ஒரு விக்கெட்டை வீழ்த்திய ஜோஃப்ரா ஆர்ச்சர் கூட வெறும் ஒரு விக்கெட் தான் கிடைத்தது என அதிருப்தி அடைந்ததை சுட்டிக்காட்டிய கும்ப்ளே, போட்டியின் அடுத்த இரண்டு நாட்கள் விறுவிறுப்பாக இருக்கும் என்று தெரிவித்தார். இந்த வார்த்தைப் போர், டெஸ்ட் தொடரின் எஞ்சிய போட்டிகளில் மேலும் அனலைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.