ராஞ்சி : கடந்த ஓராண்டாக இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் சுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் இன்னிங்ஸில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது.
இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரராக உருவெடுத்துள்ளார் சுப்மன் கில். முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் நம்பர் 3 பேட்டிங் வரிசையில் களமிறங்கி 87 இன்னிங்ஸ்களில் 48.53 பேட்டிங் சராசரியுடன் 3,834 ரன்களை விளாசி இருக்கிறார். இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு பின் புஜாராவை கழற்றிவிட்ட இந்திய அணி நிர்வாகம், சுப்மன் கில்லை நம்பர் 3 வரிசையில் களமிறக்கி வருகிறது.

அதன்பின் இந்திய டெஸ்ட் அணிக்காக நம்பர் 3ல் களமிறங்கி வந்த சுப்மன் கில் 11 இன்னிங்ஸ்களாக ஒரு அரைசதம் கூட அடிக்காமல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இதன்பின் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் அபார சதம் விளாசி அசத்தினார். இதன் மூலம் நம்பர் 3ல் சுப்மன் கில்லுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.
அதன்பின் சுப்மன் கில் தனது பேட்டிங் ஃபார்மை மீட்டெடுத்து சிறப்பாக விளையாடி வருகிறார். ஆனால் சுப்மன் கில்லின் பேட்டிங்கில் இன்னொரு பிரச்சனை இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இன்னிங்ஸில் சுப்மன் கில் தொடர்ந்து மோசமாக விளையாடி ரன்கள் குவிக்க முடியாமல் திணறி வருவது தெரிய வந்துள்ளது.
சுப்மன் கில்லின் அனைத்து சிறந்த பேட்டிங்கும் 2வது இன்னிங்ஸில் தான் வந்திருக்கிறது. கடைசியாக 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் தான் சுப்மன் கில் முதல் இன்னிங்ஸில் சதம் விளாசி இருந்தார். அதன்பின் சுப்மன் கில் 9 முறை முதல் இன்னிங்ஸ்களில் மோசமாக விளையாடி ஆட்டமிழந்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸிலும் நன்றாக விளையாடி கொண்டிருந்த சுப்மன் கில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் இன்னிங்ஸில் சுப்மன் கில்லின் பேட்டிங் சராசரி 26.41ஆகவும், இரண்டாவது இன்னிங்ஸின் பேட்டிங் சராசரி 40.84ஆகவும் உள்ளது. இதனால் முதல் இன்னிங்ஸில் சுப்மன் கில் ரன்கள் சேர்க்க முயற்சிக்க வேண்டும் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.