லீட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் களமிறங்கினார். இது இந்திய கிரிக்கெட்டில் புதிய அத்தியாயமாக பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் கேப்டனாக முதல் இன்னிங்ஸில் கில் சதம் அடித்தார்.
இதன் மூலம் விஜய் ஹசாரே, சுனில் கவாஸ்கர், திலிப் வெங்சர்கார், விராட் கோலிக்கு பிறகு கேப்டனாக முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த இந்திய கேப்டன் என்று பெருமை கில்லுக்கு கிடைத்தது.இந்த நிலையில் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் அதிகபட்சமாக 147 ரன்கள் குவித்தார்.

இதனால் இந்திய அணி 471 ரன்கள் குவித்தது. இந்த சூழலில் கில் கவனக்குறைவு காரணமாக செய்த ஒரு தவறு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. ஆட்டத்தின் முதல் நாளின் போது கில் பேட்டிங் செய்த போது கருப்பு நிற காலுறை அணிந்து விளையாடினார். இதுதான் தற்போது சிக்கலுக்கு காரணம்.
டெஸ்ட் கிரிக்கெட்டின் விதிப்படி உடைகள் என்பது மிகவும் முக்கியம். ஆடை அனைத்தும் வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும். கையில் இருக்கும் கிளவுஸ், காலில் அணியும் ஷூ அனைத்தும் வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும். ஆனால் இதற்கு மாறாக கில் கருப்பு நிற சாக்ஸை அணிந்து விளையாடினார்இது விதிகளுக்கு மீறியதாகவும்.
வெள்ளை நிற சாக்ஸ் அல்லது கிரே நிற சாக்ஸ் கூட அணிந்து கொள்ளலாம். ஆனால் இதைத் தவிர வேறு எந்த நிற சாக்சும் அணிய முடியாது. ஒருநாள் கிரிக்கெட்டில் இதுபோல் எந்த ஒரு விதியும் பெரிய அளவு கடைபிடிப்பது கிடையாது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இது தவறாகும். இதனால் சுப்மன் கில்லுக்கு போட்டியின் ஊதியத்தில் இருந்து 20% அபராதம் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் இந்த தவறை பலரும் சுட்டிக்காட்டியதை அடுத்து கில் இன்று வெள்ளை நிற சாக்ஸ் அணிந்து விளையாடினார். இதனால் கேப்டனாக முதல் போட்டியிலே கில்லுக்கு சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. இதனிடையே கிரிக்கெட் வீரர்கள் சிலர் மூடநம்பிக்கை கடைப்பிடிப்பது உண்டு. சிலர் அதிர்ஷ்டத்திற்காக சில விஷயங்களை செய்வார். அந்த வகையில் முதல் போட்டியில் கேப்டனாக ரன்கள் அடிக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய அதிர்ஷ்ட சாக்ஸை அணிந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.