ஐதராபாத் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய வீரர் சுப்மன் கில் டக் அவுட்டாகி வெளியேறியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற 231 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணியின் துணை கேப்டன் ஓலி போப்-ன் அபாரமான பேட்டிங்கால், இரண்டாவது இன்னிங்ஸில் 420 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய ஓலி போப் 196 ரன்கள் எடுத்து அசத்தினார். 4வது இன்னிங்ஸில் 231 ரன்களை சேஸ் செய்வது எளிதான விஷயமல்ல.

ஏனென்றால் இங்கிலாந்து அணியின் 2 ஸ்பின்னர்கள் சிறப்பாக பந்துவீசினாலே வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதையடுத்து இந்திய அணி தரப்பில் ஜெய்ஸ்வால் - ரோகித் சர்மா கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 42 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், டாம் ஹார்ட்லி வீசிய பந்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் இளம் வீரரான சுப்மன் கில் களமிறங்கினார். நீண்ட நாட்களாக டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமான ஃபார்மில் ஆடி வரும் சுப்மன் கில்லுக்கு இது அக்னி பரீட்சையாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்த அதே ஓவரிலேயே, சுப்மன் கில் சந்தித்த 2வது பந்தில் டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார். இதனால் ஐதராபாத் மைதானத்தில் அமர்ந்திருந்த மொத்த இந்திய ரசிகர்களும் அமைதியாகினர்.
42 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி ஆடி வந்த இந்திய அணி, திடீரென அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து பின்னடைவை சந்தித்துள்ளது. நம்பர் 3 பேட்டிங் வரிசையில் களமிறங்கி வரும் சுப்மன் கில் இதுவரை ஒருமுறை கூட அரைசதம் அடிக்கவில்லை. கடந்த 10 இன்னிங்ஸ்களில் அதிகபட்சமாக 47 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார்.
நம்பர் 3ல் சுப்மன் கில்லின் பேட்டிங் சராசரி வெறும் 21.0 ரன்களாக மட்டுமே இருப்பதால், ரசிகர்களின் விமர்சனம் அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கடைசி 19 இன்னிங்ஸ்களில் சுப்மன் கில் 9 முறை இடதுகை ஸ்பின்னர்களால் வீழ்த்தப்பட்டுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்பின்னர்களுக்கு எதிரான சுப்மன் கில் திணறி வருவது தொடர்கதையாகி வருகிறது. இதனால் விராட் கோலி வந்த பின், சுப்மன் கில் நீக்கப்பட வேண்டும் என்று ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.