மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில் இனி கேப்டன் பொறுப்புக்கு பரிசீலனை செய்யப்பட மாட்டார் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்ட கில், ஒருநாள் கிரிக்கெட்டிலும் உள்ளூர் டெஸ்ட் போட்டிகளிலும் நன்றாக விளையாடி வந்தார்.
ஆனால், வெளிநாடுகளில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் கூட கில், ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. இதன் காரணமாக நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆகாஷ் சோப்ரா, ரோகித் சர்மா ஓய்வு பெற்ற பிறகு இந்திய அணியின் அடுத்த கேப்டனாக இருக்கும் பந்தயத்தில் கில் இடம்பெற மாட்டார் என கூறியிருக்கிறார். மேலும் பேசிய அவர், என்னைக் கேட்டால் ஜெய்ஸ்வால் மற்றும் ரிஷப் பன்ட் ஆகியோர்தான் அடுத்த கேப்டன் ஆவதற்கான தகுதிகள் இருக்கிறது.
எனக்கு கிடைத்த தகவலின் படி ரோகித் சர்மா இன்னும் சில மாதங்கள் தான் அணியை வழிநடத்துவார். அதன் பிறகு பிசிசிஐ புதிய கேப்டனை தேர்வு செய்யப் போகிறது. அவருக்கு அடிக்கடி காயம் ஏற்படுகிறது. இதனால் அவர் அந்த பொறுப்புக்கு வருவது சரி கிடையாது. ஆனால் இதற்கு என்னிடம் ஒரு வழி இருக்கிறது. இதற்கான முடிவை நாம் ஆறு மாதத்திற்கு பிறகு தான் எடுக்க வேண்டும்.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது பும்ராவை டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும். அப்போது ஒரு இளம்வீரரை துணை கேப்டனாக நியமித்து அவரை நாம் வளர்க்க வேண்டும். நாம் டி20 உலக கோப்பையை வென்ற போது அடுத்த கேப்டனை தயார் செய்யும் பணி நன்றாக தான் சென்று கொண்டிருந்தது.
கில், இந்திய அணியின் துணை கேப்டனாக அதன் பிறகு நியமிக்கப்பட்டார். ஆனால் திடீரென்று கில் அணியில் இருந்து நீக்கப்பட்டார். எனவே இனி டி20 அணியின் கேப்டனாக கில் இருக்கப் போவதில்லை என தெரிகிறது. இன்னும் சொல்லப்போனால் டி20 அணியில் கில்லுக்கு இடம் இருக்காது என நினைக்கிறேன் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.