மும்பை: இந்தியா, இங்கிலாந்து அணிக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.விராட் கோலி, ரோஹித் சர்மா,அஸ்வின், ஷமி ஆகியோர் இல்லாத நிலையில் இந்திய அணி இந்த தொடரில் பங்கேற்கிறது.
இந்த நிலையில் இந்த போட்டி குறித்து இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் பேட்டியை தற்போது பார்க்கலாம். இந்திய அணியில், ஜடேஜா, அஸ்வின், ஆகியோர் இணைந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் பல சாதனைகளை செய்து இருக்கிறார்கள்.

தற்போது அஸ்வின் ஓய்வு பெற்று விட்டார்.இவர்கள் இருவரிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். தற்போது ஜடேஜா மட்டும்தான் இருக்கின்றார். இதன் காரணமாக ஜடேஜா உடன் இணைந்து விளையாடுவது எனக்கு பெருமையான விஷயமாக கருதுகின்றேன். நான் அவரிடம் அதிக நேரம் செலவழித்து வருகின்றேன்.
இங்கிலாந்தில் எப்படி பந்து வீசுவது என்பது குறித்து அவரிடம் நிறைய கற்றுக் கொண்டு வருகின்றேன். எப்போதும் பேருந்தில் ஜடேஜாவும், ரோகித் சர்மாவும் ஒன்றாக அமர்ந்திருப்பார்கள். ரோகித் இடத்தை பேருந்தில் யாராலும் பிடிக்க முடியாது. தற்போது ரோகித் இல்லாததால் நான் ஜடேஜா உடன் அந்த இடத்தை பிடித்து செலவழித்து வருகின்றேன்.
சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளமாக தான் இருக்கின்றது. வெப்பமான சூழல் நிலவும் போது பந்து நன்றாக ஆடுகளத்தில் திரும்புகிறது. ஆனால் நான் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. நாங்கள் நிறைய டி20 போட்டிகளில் விளையாடிவிட்டு தற்போது இங்கு வந்திருக்கின்றோம். எனவே கடந்த நான்கு, ஐந்து நாட்களாக அதிக அளவு பந்துகளை பயிற்சியில் வீசி வருகின்றோம்.
சுப்மன் கில்லுக்கு ஒரு அணியை எப்படி வழி நடத்துவது என்று நன்றாக தெரியும். கடந்த இரண்டு ஆண்டுகளாக பல சீனியர் வீரர்களுடன் அவர் பணியாற்றி இருக்கின்றார். கடைசி ஒரு ஆண்டில் மட்டும் ரோஹித் சர்மாவுடன் அவர் பல நிகழ்வுகளில் இணைந்து ஆலோசனை செய்ததை பார்த்திருக்கின்றேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமில்லாமல் ஒருநாள் கிரிக்கெட்டிலும் அவர் ஒரு கேப்டனாக பல விஷயங்களை கற்று இருக்கிறார்.
நான் பார்த்த வரையில் அவர் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் இருக்கின்றார். அணியை உற்சாகமாக வைத்துக் கொள்வதில் கில் கடந்த சில ஆண்டுகளாகவே முக்கிய பங்காற்று வருகின்றார்.நான் கில்லை நான்கு ஆண்டுகளாக பார்த்து இருக்கின்றேன். விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற கேப்டனிடம் இருக்கும் அதே தகுதி கில்லிடம் இருக்கின்றது. எனவே இந்திய அணியை வழிநடத்துவதற்கு கில் தயாராகி விட்டதாகவே நான் நினைக்கின்றேன் என குல்தீப் தெரிவித்துள்ளார்.