லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றியை பெற்று தொடரை சமன் செய்து இருக்கிறது.
இந்த தொடரில் 754 ரன்கள் குவித்து நான்கு சதம், அதில் ஒரு இரட்டை சதம் அடங்கும். சுப்மன் கில்,தொடர் நாயகன் விருதை வென்றார். இந்த தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணி கேப்டன் சுப்மன் கில், இந்த தொடரில் இரு அணி வீரர்களும் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள்.

எங்கள் அணி வீரர்கள் டாப் கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இந்த ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. சிராஜ், பிரசித் கிருஷ்ணா போன்ற பவுலர்கள் எல்லாம் அணியில் இருந்தால் நிச்சயம் கேப்டனுக்கான பணி சுலபமாகிவிடும். எங்கள் அணி பவுலர்கள் பந்தை பேச வைத்தார்கள்.
இந்த போட்டிக்கு வரும் முன் எங்கள் மேல் கடும் நெருக்கடி இருந்தது. இங்கிலாந்து வீரர்களும் சிறப்பாக பந்து வீசினார்கள். எனினும் நாங்களும் நம்பிக்கையுடன் இருந்தோம். இன்றைய நாள் கடும் நெருக்கடியை நாங்கள் சந்தித்தோம். சிராஜ் போன்ற ஒரு வீரர் அணியில் இருப்பது ஒவ்வொரு கேப்டனின் கனவாகும். ஒவ்வொரு பந்திலும் சிராஜ் முழு திறனை வெளிப்படுத்தி பந்தை வீசினார்.
இந்திய அணிக்காக தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அவர் கொடுத்தார். ஐந்தாவது நாளில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்று தெரியாமலே இரண்டு அணி வீரர்களும் களத்திற்கு வந்தோம். இந்த இரண்டு அணி வீரர்களும் நாங்கள் எவ்வளவு உத்வேகத்துடன் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுகிறோம் என்று அனைவரும் பார்த்து இருப்பீர்கள்.
இந்த வெற்றி நல்ல ஒரு வெகுமதியாக எங்களுக்கு அமைந்துள்ளது. ஒரு பேட்ஸ்மேன் ஆக நான் சிலவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்று முயற்சி செய்தேன். என்னுடைய பேட்டிங் யுக்திகளை கொஞ்சம் மாற்றினேன். இந்த தொடரில் சிறந்த பேட்ஸ்மேனாக வரவேண்டும் என்று நினைத்தேன். அந்த குறிக்கோளை எட்டியதை நினைத்து மகிழ்ச்சி கொள்கின்றேன். பேட்டிங் யுக்தி மற்றும் மன உத்வேகம் என இரண்டுமே இணைந்தால் தான் களத்தில் சிறந்து விளையாட முடியும். இந்த தொடரில் நாங்கள் கற்றுக் கொண்ட ஒரு விஷயம் என்னவென்றால் எப்போதும் நம்பிக்கையை இழந்து விடக்கூடாது என்பதுதான் என்று கில் கூறியுள்ளார்.