லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-2 என சமன் செய்து, கேப்டனாக தனது முதல் தொடரிலேயே முத்திரை பதித்திருக்கிறார் இளம் புயல் சுப்மன் கில். பேட்டிங்கில் 754 ரன்களைக் குவித்து சாதனைகளை அடுக்கியதோடு, விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற ஜாம்பவான்கள் இல்லாத அணியை முன்னின்று வழிநடத்தி, சரித்திர வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
இந்த பிரமிக்க வைக்கும் ஆட்டத்தைத் தொடர்ந்து, முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், சுப்மன் கில்-லை ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் அடுத்த கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கையை பதிவு செய்துள்ளார். இதன் மூலம் ரோஹித் சர்மாவின் ஒருநாள் அணியின் கேப்டன் பதவிக்கு சுப்மன் கில் போட்டியாக மாறி உள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், கேப்டனாக அறிமுகமான சுப்மன் கில், யாரும் எதிர்பாராத வகையில் தனது திறமையை வெளிப்படுத்தினார். 10 இன்னிங்ஸ்களில் 754 ரன்கள் குவித்து, அதில் ஒரு இரட்டை சதம் மற்றும் மூன்று சதங்கள் அடங்கும். இதன் மூலம், ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய கேப்டன் என்ற கவாஸ்கரின் சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். குறிப்பாக எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் அவர் அடித்த 269 ரன்கள், ஒரு கேப்டனாக அவரது மன உறுதியையும், போராட்ட குணத்தையும் வெளிப்படுத்தியது.
"ஒரு இளம் வீரராக அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, இங்கிலாந்து மண்ணில் தொடரை சமன் செய்வது என்பது சாதாரண விஷயமல்ல. கேப்டன் என்ற அழுத்தத்துடன் பேட்டிங்கில் இவ்வளவு பெரிய சாதனைகளை நிகழ்த்தியதே அவரது திறமைக்குச் சான்று" என கிரிக்கெட் வல்லுநர்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்திய அணியின் தற்போதைய ஒருநாள் கேப்டனாக ரோஹித் சர்மா இருந்தாலும், அடுத்த தலைமுறைத் கேப்டனை உருவாக்கும் நேரம் வந்துவிட்டதாக கவாஸ்கர் கூறி இருக்கிறார். ஐந்தாவது டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு பேசிய கவாஸ்கர், "தேர்வுக்குழுவினர் ஒருநாள் அணிக்கு ஒரு புதிய கேப்டனை தேடுகிறார்கள் என்றால், சுப்மன் கில்-லை கேப்டனாக நியமிக்க இதுவே சரியான தருணம்" என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில், "ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் விளையாடத் தயாராக உள்ளனர், ஆனால் அவர்களைத் தேர்ந்தெடுப்பது தேர்வுக்குழுவின் கையில்தான் உள்ளது. ஆஸ்திரேலியா அல்லது மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான அடுத்த ஒருநாள் தொடரின்போது, சுப்மன் கில்-லிடம் பொறுப்பை ஒப்படைப்பது பற்றி தேர்வாளர்கள் சிந்திக்க வேண்டும்" என்று கூறினார்.
சுப்மன் கில்லின் ஆட்டத்தைக் கண்டு வியந்த கவாஸ்கர், "அவர் அணியில் அனைவராலும் விரும்பப்படும் ஒரு வீரர். சதம் அடித்தால் அதோடு திருப்தி அடையமாட்டார், அதை இரட்டை சதமாக மாற்ற முயற்சிப்பார். இரட்டை சதத்திலும் திருப்தி அடையவில்லை என்றால் முச்சதத்தை நோக்கிச் செல்வார். களத்தில் கடைசி வரை நின்று, ஒவ்வொரு ரன்னும் முக்கியம் என்பதை அவர் தனது ஆட்டத்தின் மூலம் காட்டுகிறார்" என்று புகழ்ந்து தள்ளினார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற்ற நிலையில், ஒருநாள் போட்டிகளிலும் புதிய கேப்டனை நியமிப்பது குறித்த இந்த விவாதம் எழுந்துள்ளது. சுப்மன் கில், டெஸ்ட் கேப்டனாக தனது முதல் தொடரிலேயே பேட்டிங் மற்றும் தலைமைப் பண்பில் முதிர்ச்சியைக் காட்டியுள்ளார். நெருக்கடியான சூழலில் அணியை வழிநடத்திய விதம், இளம் வீரர்களுக்கு உத்வேகம் அளித்த பாங்கு ஆகியவை அவரை எதிர்கால கேப்டனுக்கான போட்டியில் முன்னிறுத்துகிறது.
கவாஸ்கர் போன்ற ஒரு ஜாம்பவான், கில்-லுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்திருப்பது, தேர்வுக்குழுவினரின் கவனத்தை நிச்சயம் ஈர்க்கும். ஒருபுறம் அனுபவ வீரரான ரோஹித், மறுபுறம் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இளம் தலைவரான கில் - இந்திய கிரிக்கெட் வாரியம் விரைவில் ஒரு முக்கிய முடிவை எடுக்க வேண்டிய சூழலில் உள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் வெற்றி, சுப்மன் கில்-லின் கிரிக்கெட் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை மட்டுமல்ல, இந்திய அணியின் எதிர்கால தலைமைக்கான ஒரு வலுவான விதையையும் விதைத்துள்ளது.