லீட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்திருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்திய அணி முதலில் 471 ரன்கள் எடுக்க இங்கிலாந்து அணி 465 ரன்களில் ஆட்டம் இழந்தது.
இதனை அடுத்து ஆறு ரன்கள் முன்னிலை பெற்றிருந்த நிலையில் இந்திய அணி தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது. 90 ரன்கள் இரண்டு விக்கெட் என்ற ஸ்கோர் உடன் இந்திய அணி நான்காவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது.

இதில் சிறப்பாக விளையாடிய ராகுல் தன்னுடைய அரை சதத்தை பூர்த்தி செய்தார். இந்த சூழலில் முதல் இன்னிங்சில் சதம் அடித்த கேப்டன் சுப்மன் கில், இரண்டாவது இன்னிங்சிலும் சதம் அடித்து விராட் கோலியை போல் பட்டையை கிளப்புவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் எதிர்பாராத விதமாக பிரைடன் கார்ஸ் வீசிய பந்தை அடிக்க முற்பட்டு இன்சைட் எட்ஜ் ஆகி, ஆப் ஸ்ட்ம்பை பதம் பார்த்தது. இதனால் கில் 8 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதன் மூலம் இந்திய அணி 92 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்துள்ளது. தற்போது முதல் டெஸ்ட் போட்டியில் இன்றும் நாளையுமான ஆட்டம் மட்டுமே எஞ்சி இருக்கிறது.
இதில் இந்திய அணி இன்று முழுவதும் விளையாடி 350 ரன்களுக்கு மேல் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இல்லை என்றால் இங்கிலாந்து அணி இந்த டெஸ்ட் போட்டியில் எளிதில் வெற்றி பெற்றுவிடும். இங்கிலாந்து அணி வீரர்கள் அதிரடியாக ஆடுவார்கள் என்பதால் அவர்களுக்கு எந்த இலக்கை நிர்ணிப்பது என்பதே ஒரு குழப்பமாக தான் இருக்கும்.
இந்த சூழலில் கில் தற்போது சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்திருப்பதால் கருண் நாயர், பண்ட், ஜடேஜா, சர்துல் தாக்கூர் மீது நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. இதனால் இந்திய வீரர்களின் விக்கெட்டை வீழ்த்த இங்கிலாந்தும், ரன் குவிக்க வேண்டிய நெருக்கடியில் இந்திய அணியும் இருப்பதால் இந்த போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கின்றது.