நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது ஜெய்ஷ்வால் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் சூப்பர் ஸ்டாராக உருவெடுத்திருக்கிறார்கள். ஜெய்ஸ்வால் டெஸ்ட் போட்டிகளிலும், அபிஷேக் ஷர்மா டி20 போட்டிகளிலும் அபாரமாக விளையாடி வருகிறார்கள். இந்த சூழலில் கில், ஒரு நாள் கிரிக்கெட்டில் நன்றாக விளையாடி வந்தார்.
ஆனால், அதன் பிறகு தொடர்ந்து டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகள் தடுமாறி வந்தார். இதனால் இந்த இரண்டு வீரர்களாலும் கில்லுக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் இங்கிலாந்து இந்தியாவுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் வியாழக்கிழமை தொடங்குகிறது.

"இதற்காக செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் துணை கேப்டன் கில்லிடம் இந்த இரு வீரர்கள் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த கில்,"அபிஷேக் ஷர்மாவும் நானும் சிறுவயதில் இருந்தே நல்ல நண்பர்கள். ஜெய்ஸ்வாலும் எனக்கு நல்ல நண்பர் தான். எங்கள் மூவருக்கும் இடையே எந்த ஒரு போட்டியும் இல்லை. பொறாமையும் இல்லை".
"நாங்கள் நாட்டுக்காக விளையாடுகிறோம். இதனால் விளையாடும் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று தான் நாங்கள் நினைப்போமே தவிர இந்த வீரர் சரியாக விளையாட கூடாது என்றெல்லாம் நினைக்க மாட்டோம். நாட்டுக்காக விளையாடும்போது அனைவரும் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைக்க தான் முயற்சி செய்வோம்".
"சக வீரர்கள் அணிக்காக வெற்றியைத் தேடித் தரும்போது எங்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும் நான் என்னுடைய சக வீரர்களுக்கு வாழ்த்துக்களை கூறுவேன். இதேபோன்று விஜய் ஹசாரே தொடரில் கருண் நாயர் 5 சதம் அடித்து அபாரமாக விளையாடி இருக்கிறார். ஆனால் தற்போது இந்திய அணியில் யாரை தூக்கி விட்டு கருண் நாயரை சேர்க்க முடியும்".
"தற்போது இருக்கும் இந்திய அணியில் அனைவரும் உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடியவர்கள். இதனால் கருண் நாயருக்காக யாரையும் நீக்க முடியாத சூழல் இருக்கின்றது. துணை கேப்டனாக முதல் ஐசிசி தொடரில் விளையாடுகிறேன். இது எனக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய சவால் இதை நான் சிறப்பாக பயன்படுத்தி ரோகித் சர்மாவுக்கு என்னுடைய ஆலோசனைகளை வழங்குவேன்" என்று கில் தெரிவித்துள்ளார்.