ராஜ்கோட் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில் சிக்சருடன் அரைசதத்தை நிறைவு செய்துள்ளார்.
கடந்த ஆண்டு இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் இரட்டை சதம் விளாசிய போது, ரோகித் சர்மா சில ஆண்டுகளுக்கு முன் பதிவிட்ட ட்வீட் ட்ரெண்டாகியது. அதில் சுப்மன் கில், யாராலும் உங்களை போல் மிகச்சிறப்பாக புல் ஷாட்டை அடிக்க முடியாது என்று ரோகித் சர்மாவுக்கு வாழ்த்து கூறியிருப்பார். அதற்கு ரோகித் சர்மா, நன்றி எதிர்காலமே என்று மறுவாழ்த்து கூறி பதிவிட்டிருப்பார்.

ஏனென்றால் ரோகித் சர்மா எப்படி தூக்கத்தில் எழுப்பி புல் ஷாட் விளையாட கூறினாலும், சரியாக விளையாடுவாரோ சுப்மன் கில்லும் அப்படியான வீரர் தான். சமீப காலங்களாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சுப்மன் கில்லின் பேட்டிங் ஃபார்ம் கொஞ்சம் தடுமாற்றடைந்து வந்தது. குறிப்பாக ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக களமிறங்கிய பின், சுப்மன் கில் நம்பர் 3ல் களமிறக்கப்பட்டு வந்தார்.
யு19 மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சுப்மன் கில் நம்பர் 3ல் விளையாடுவார். இதனால் அவரால் நம்பர் 3 வரிசையில் இருக்கும் சவால்களை எளிதாக எதிர்கொள்ள முடியும் என்று பார்க்கப்பட்டது. ஆனால் நம்பர் 3ல் களமிறங்கிய சுப்மன் கில் 11 இன்னிங்ஸ்களாக ஒரு அரைசதம் கூட அடிக்காமல் வந்தார். அதுமட்டுமல்லாமல் இடதுகை ஸ்பின்னர்களிடம் சுப்மன் கில் திணறியது கண்கூடாக தெரிந்தது.
இந்த நிலையில் கடந்த போட்டியின் 2வது இன்னிங்ஸில் சதம் விளாசி ஃபார்முக்கு வந்த சுப்மன் கில், இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 9 பந்துகளில் டக் அவுட்டாகி வெளியேறினார். இதனால் ரோகித் சர்மா களத்தில் முகத்தில் கோபத்தை வெளிப்படுத்தினார். இந்த நிலையில் முதல் இன்னிங்ஸில் சொதப்பியதற்கும் சேர்த்து சுப்மன் கில் 2வது இன்னிங்ஸில் அசத்தியுள்ளார்.
126 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நிலையில், கேப்டன் ரோகித் சர்மா 19 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய சுப்மன் கில் நிதானமாக ரன்களை சேர்த்து வந்தார். எந்த சூழலிலும் பதற்றம் கொள்ளாமல் ஆடிய சுப்மன் கில், ரன்கள் சேர்க்க கொஞ்சம் கூட அவசரம் காட்டவில்லை. ஒரு கட்டத்தில் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாட, இங்கிலாந்து அணியின் கவனம் அவர் பக்கம் திரும்பியது.
இதனால் அவ்வப்போது சில பவுண்டரிகளை விளாசிய சுப்மன் கில், எளிதாக ரன்களை சேர்த்து வந்தார். இந்த நிலையில் சுதாரித்து கொண்ட இங்கிலாந்து அணி மார்க் வுட் மூலமாக சுப்மன் கில்லுக்கு ஷார்ட் பால் வீசி அட்டாக் செய்தது. சுப்மன் கில் 45 ரன்களில் இருந்த நிலையில், மார்க் வுட் வீசிய ஷார்ட் பாலை சிக்சருக்கு அனுப்பி அரைசதத்தை நிறைவு செய்தார். இது சுப்மன் கில்லின் 5வது அரைசதமாகும். இதன் மூலம் இந்திய அணியின் முன்னிலை 300 ரன்களை கடந்தது குறிப்பிடத்தக்கது.