லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய வேண்டிய உத்வேகத்துடன் இந்திய அணி களமிறங்குகிறது. இந்த போட்டி வியாழக்கிழமை லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது.
இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் லண்டன் ஓவல் மைதானத்தில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் கில், பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

ஆடுகள பராமரிப்பாளர் உடன் பயிற்சியாளர் கம்பீருக்கு ஏற்பட்ட பிரச்சனை குறித்து விளக்கம் அளித்த கில், இந்த தொடரில் நாங்கள் நான்கு போட்டிகள் விளையாடிவிட்டோம். இந்த நான்கு போட்டிகளிலும் நாங்கள் ஆடுகளத்தை சோதனை செய்தபோது யாரும் எங்களை தடுக்கவில்லை. உள்ளே வரக்கூடாது என்று யாரும் எங்களுக்கு அறிவுறுத்தல்களை கொடுக்கவில்லை.
நாங்கள் கிரிக்கெட்டை விளையாடுகின்றோம். இதில் அப்படி என்ன பிரச்சனை இருக்கிறது என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் நீண்ட காலமாக கிரிக்கெட் விளையாடி வருகின்றேன். ஆடுகளத்தை சோதனை செய்யும் போது ரப்பர் ஸ்பைக்ஸ் ஷூ அல்லது வெறும் காலில் நடந்து வந்து ஆடுகளத்தை பார்க்கலாம்.
அதில் எந்த தவறும் கிடையாது. ஆனால் ஆடுகள பராமரிப்பாளர் ஏன் எங்களை அனுமதிக்கவில்லை என்று தெரியவில்லை. பயிற்சியாளருக்கு ஆடுகளத்தைப் பார்க்க எல்லா உரிமையும் உண்டு. நேற்று நடந்தது தவிர்க்கப்பட்டிருக்கலாம். ஆடுகளப் பராமரிப்பாளர் செய்தது தேவையில்லாதது.
ஆடுகளம் பராமரிப்பாளருடன், நாங்கள் பேசிய விதம் குறித்து நாங்கள் கவலை கொள்ளவில்லை. இங்கிலாந்து அணி வீரர்களிடம் எங்களுக்கு நல்ல உறவு தான் இருக்கின்றது. ஆனால் களத்திற்கு வந்துவிட்டால் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று தான் நாங்கள் நினைப்போம். எங்கள் இரண்டு அணிகளுமே களத்தில் சிறப்பாக செயல்பட்டு இருக்கின்றது.
கடும் போட்டிகளை நாங்கள் வெளிப்படுத்திருக்கின்றோம். இதுபோன்ற கடும் நெருக்கடி ஆடுகளத்தில் ஏற்படும் போது சில சமயம் நம்மை மீறி சில விஷயங்களை செய்து விடுவோம். ஆனால் போட்டி முடிவடைந்த உடன் இரு அணி வீரர்களுக்கு இடையே எப்போதும் நல்ல நட்பு இருக்கின்றது என்று கில் கூறியுள்ளார்.