பிர்மிங்காம்: இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சமீபத்தில் நியமிக்கப்பட்ட சுப்மன் கில், செய்த ஒரு செயலால் பிசிசிஐயின் கோபத்துக்கு ஆளாகியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டத்தில், இந்திய அணி 427 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அப்போது, ஓய்வறையில் இருந்து கேப்டன் சுப்மன் கில் டிக்ளேர் செய்வதாக அறிவித்து, ஆடுகளத்தில் இருந்த வீரர்களை உள்ளே அழைத்தார்.
அவ்வாறு அவர் ஓய்வறையில் நின்று அழைக்கும் போது அணிந்திருந்த டி-ஷர்ட்டில் நைக் (Nike) நிறுவனத்தின் லோகோ தெளிவாகத் தெரிந்தது. ஆனால், இந்திய அணி அடிடாஸ் (Adidas) நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய வீரர்கள் அணியும் உடையில் அடிடாஸ் நிறுவனத்தின் லோகோ தான் இடம்பெறும் என்பது விதிமுறை.

இந்திய அணி வீரர்கள் அனைவரும் பிசிசிஐயின் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்போது, அதில் அடிடாஸ் நிறுவனம் தவிர மற்ற நிறுவனங்களின் உடையை, இந்திய அணி ஆடும் போட்டிகளின் போது அணியக்கூடாது என்ற விதிமுறையும் உள்ளது. தற்போது அடிடாஸ் நிறுவனம் சுப்மன் கில்லின் இந்த செயலால் நிச்சயம் அதிருப்தி அடைந்திருக்கும் என சமூக வலைதளத்தில் வியாபாரம் சார்ந்த வல்லுநர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
அதிலும் குறிப்பாக, அடிடாஸ் நிறுவனத்திற்கும் நைக் நிறுவனத்திற்கும் பல்லாண்டுகளாகப் போட்டி நிலவி வருகிறது. இரண்டு நிறுவனங்களும் எதிரி நிறுவனங்களாக ஒன்றுக்கொன்று விடாப்பிடியாகப் போட்டி போட்டு வருகின்றன. இந்த நிலையில், சுப்மன் கில் அடிடாஸின் போட்டி நிறுவனத்தின் உடையை, இந்திய அணி விளையாடிக் கொண்டிருக்கும்போது அணிந்து அது கேமராவிலும் பதிவானது, முக்கியமான விதிமீறலாகப் பார்க்கப்படுகிறது.
சுப்மன் கில் இந்திய அணியின் உடைக்கு உள்ளே நைக் நிறுவனத்தின் உடை ஒன்றை அணிந்து இருந்தார். அது வெளியே தெரியாது என நினைத்து அவர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டு இருக்கலாம். ஆனால், அவர் மேலே இருந்த இந்திய அணி உடையை நீக்கி விட்டு இருக்கும் போது டிக்ளர் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது தான் அவர் நைக் உடையுடன் கேமராவில் சிக்கினார்.
இது குறித்து அடிடாஸ் நிறுவனம் பிசிசிஐக்கு அழுத்தம் கொடுக்கலாம். குறிப்பாக, அடிடாஸ் நிறுவனம் அளித்துள்ள விளம்பர ஒப்பந்தத்தில் இதனால் சிக்கல் ஏற்படலாம். அடிடாஸ் நிறுவனம் இந்திய அணி உடையை தயார் செய்து அளிப்பதுடன், ஒரு போட்டிக்கு 75 லட்சம் ரூபாய் விளம்பர தொகையாக அளித்து வருகிறது.