பிர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதை அடுத்து, பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அங்கு வந்த இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் மிகவும் தன்னம்பிக்கையுடன் நடந்து வந்தார். புன்னகையோடு இருந்த அவர் பத்திரிகையாளர்கள் மத்தியில் யாரையோ தேடினார். பின்னர், "எங்கே எனக்குப் பிடித்த அந்தப் பத்திரிகையாளர்?" என்று கேள்வி எழுப்பினார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த மைதானத்தில் இந்திய அணி இதற்கு முன் எட்டு போட்டிகளில் விளையாடி அதில் ஒரு வெற்றி கூட பெறாமல் இருந்தது. இந்த நிலையில், ஒன்பதாவது முறையாக இதே மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடியது.

இந்தப் போட்டிக்கு முன்னதாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, கேப்டன் சுப்மன் கில்லிடம் அந்தப் பத்திரிகையாளர் இது குறித்துக் கேள்வி எழுப்பியிருந்தார். "இந்திய அணி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இதுவரை வெற்றி பெற்றதே இல்லை. இது உங்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துமா? என்ன செய்யப் போகிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அப்போது முதல் டெஸ்ட் போட்டியின் தோல்வியிலிருந்து வந்திருந்த கேப்டன் சுப்மன் கில் நம்பிக்கை அளிக்கும் வகையில் பதில் அளித்தார்.
இந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிலும் இதுவே ஒரு வெளிநாட்டு டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மிகப்பெரிய வெற்றியாகவும் அமைந்தது. இதை அடுத்துதான் அந்தப் பத்திரிகையாளரைத் தேடினார் கேப்டன் சுப்மன் கில். அவருக்குப் பதிலடி கொடுப்பதற்காகவே அவர் தேடினார்.
ஆனால், அந்தப் பத்திரிகையாளர் அங்கு இல்லை. இதை அடுத்து, "எங்கே எனக்குப் பிடித்த அந்தப் பத்திரிகையாளர் எட்ஜ்பாஸ்டர் மைதானத்தில் இந்திய அணியின் ரெக்கார்டை பற்றிப் பேசியவர்? நான் அவரைப் பார்ப்பேன் என்று நினைக்கிறேன்," என்று கூறினார்.
பின்னர் சுப்மன் கில் இந்திய அணியில் சிறப்பாக ஆடிய வீரர்களைக் குறிப்பிட்டுப் பாராட்டினார். இந்தப் போட்டியில் சுப்மன் கில் முதல் இன்னிங்ஸில் 269 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 161 ரன்களும் எடுத்து சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் ஆட்டநாயகன் விருதையும் பெற்றிருந்தார்.