லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியின் விளிம்பில் இருந்து ஆறு ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று தற்போது தொடரையும் சமன் செய்து இருக்கிறது.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி ஒரு தொடரில் ஒன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் பின்தங்கி தற்போது தொடரை சமன் செய்திருப்பது இதுவே முதல் முறையாகும். கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்டது.

ஆனால் சிராஜ், பிரசித் கிருஷ்ணாவும் கொஞ்சம் கூட நம்பிக்கை இழக்காமல் போர் குதிரை போல் செயல்பட்டு இங்கிலாந்துக்கு ஒவ்வொரு ரன்னையும் எடுக்க விடாமல் சிரமத்தை கொடுத்தனர். இந்த சூழலில் வெற்றிக்கு ஏழு ரன்கள் இருந்த போது அட்கின்சன் விக்கெட்டை சிராஜ் வீழ்த்திய உடன் இந்தியாவின் வெற்றி பெற்றது.
ஒட்டுமொத்த இந்திய வீரர்களும் இந்த வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடினார்கள். குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெற்றி பெற்றது இதுவே முதல் முறையாகும். அனைத்து வீரர்களும் முகமது சிராஜை கட்டிப்பிடித்து தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதனை தொடர்ந்து இந்த தொடர் முழுவதும் ஆதரவளித்த இந்திய ரசிகர்களுக்கு மைதானத்தை சுற்றி வந்து இந்திய வீரர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர். எப்போதுமே சிரிக்காமல் இருக்கும் கம்பீர் இந்தியா வெற்றி பெற்றவுடன் தன்னையே அறியாமல் சிரித்தார். அது மட்டும் இல்லாமல் வானத்தைப் பார்த்து கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
ஒவ்வொரு சக அணி நிர்வாகிகளையும் கம்பீர் கட்டி அணைத்தார். அப்போது அவருடைய கண்களில் லேசாக கண்ணீர் இருந்தது. இதனை தொடர்ந்து கில்லை கட்டி அணைத்து அவருக்கு கம்பீர் வாழ்த்து தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல் கை உடைந்த நிலையில் களத்திற்கு பேட்டிங் செய்ய வந்த கிறிஸ் வொக்சை இந்திய வீரர்கள் பாராட்டி வாழ்த்தி தெரிவித்தனர்.