லண்டன்: இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக இருக்கும் ரிஷப் பண்ட்டை கடுமையாக விமர்சித்திருக்கிறார் முன்னாள் இந்திய அணி கேப்டன் சௌரவ் கங்குலி. தற்போது இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
ரிஷப் பண்ட் இந்திய அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். சுப்மன் கில் முதல் முறையாக இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். புதிய சூழ்நிலையில் இந்திய அணி இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

இந்த நிலையில், ரிஷப் பண்ட் இதற்கு முன் ஆஸ்திரேலியா அணியுடன் விளையாடிய டெஸ்ட் தொடரில் மிக மோசமான ஷாட்களை ஆடியதை சுட்டிக்காட்டி விமர்சனம் செய்திருக்கிறார் கங்குலி. இதுபற்றி அவர் பேசுகையில், "ரிஷப் பண்ட் நல்ல வீரர். ஆனால் அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு விளையாடியது போல எப்போதும் விளையாட வேண்டும். அவர் ஆஸ்திரேலியாவில் விளையாடியதை நான் பார்த்தேன். நான் என்ன பார்த்தேனோ அதை சுத்தமாக விரும்பவில்லை."
"அங்கு பண்ட் நிறைய ஷாட்களை ஆடினார். தொடர்ந்து பேட்டை சுழற்றிக் கொண்டே இருந்தார். இதற்கு முன் சில இடங்களில் அவர் அடித்த பந்துகள் மைதானத்தை விட்டு வெளியே சென்று இருக்கின்றன. அவரிடம் அந்த திறமை இருக்கிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அதை எப்படி செயல்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம். அவர் இன்னும் அதிகமாக சண்டை போட்டு ஆட வேண்டும் என்று நினைக்கிறேன். அவரிடம் நல்ல தடுப்பாட்டம் உள்ளது. எனவே அவர் தடுத்து விளையாட வேண்டும்" என்றார் சௌரவ் கங்குலி.
ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் 9 இன்னிங்ஸ்களில் 255 ரன்கள் எடுத்தார். அவரது பேட்டிங் சராசரி அங்கு 28.3 என்பதாக இருந்தது. ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்திருந்ததால் அவர் மீது கடும் விமர்சனம் இருந்தது. குறிப்பாக, அவர் ஆட்டமிழந்த விதம் பலராலும் விமர்சிக்கப்பட்டது.
முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அவரை 'முட்டாள், முட்டாள், முட்டாள்' என மூன்று முறை திட்டியது ரசிகர்கள் மத்தியில் பிரபலமான வாசகமாக மாறியது. இந்த நிலையில், அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடுவாரா என்ற சந்தேகம் உள்ளது.