இந்திய கிரிக்கெட் அணியில் தலைமை பயிற்சியாளராக தற்போது கம்பீர் செயல்பட்டு வருகிறார். டி20 ஒருநாள் தொடரில் கம்பீர் சிறப்பாக செயல்பட்டாலும், டெஸ்ட் போட்டிகளில் கம்பீர் தலைமையில் இந்திய அணி பெரிய அளவு சாதிக்கவில்லை. சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரை இழந்தது.
அது மட்டுமில்லாமல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரையும் இந்திய அணி இழந்தது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை கம்பீர் பறிகொடுத்தார். எனினும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இந்திய அணி கைப்பற்றி இழந்த மானத்தை மீட்டெடுத்தார்.

இந்த தருணத்தில் தற்போது கம்பீருக்கு மிகப்பெரிய பொறுப்பாக இங்கிலாந்து தொடர் அமைந்துள்ளது. இந்த சூழலில் கம்பீரின் ஆதிக்கத்தால் தான் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற வீரர்கள் அணியை விட்டு வெளியேறியதாக தெரிகிறது. இதனால் கம்பீருக்கு எதிராகவும் பிசிசிஐயில் புகைச்சல் கிளம்பி வருகிறது.
இந்த தருணத்தில் தான் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐயின் முன்னாள் தலைவருமான கங்குலி ஒரு கருத்தை வெளியிட்டு இருப்பது அனைவராலும் கவனிக்கப்படுகிறது. நிகழ்ச்சி ஒன்றில் கங்குலி இடம் இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக நீங்கள் வருவீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த கங்குலி, நான் ஏற்கனவே இந்திய கிரிக்கெட்டில் பல பொறுப்புகளில் இருந்திருப்பதால் இதைப் பற்றி தற்போது யோசிக்கவில்லை. எனினும் 2013 ஆம் ஆண்டுக்கு பிறகு நான் களத்தில் எந்தவித போட்டியிலும் விளையாடவில்லை. அதன் பிறகு பிசிசிஐயின் தலைவர் பொறுப்பை வகித்து பல நல்ல காரியங்களை செய்திருக்கிறேன்.
அதில் நான் செய்தது முக்கியமானது மகளிர் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்தது. தற்போது எனக்கு எதிர்காலம் என்ன வைத்திருக்கிறது என்று தெரியவில்லை. எனக்கு 50 (53) வயது தான் ஆகிறது. எனவே அடுத்தது என்ன நடக்கும் என்பதை பார்ப்போம். ஆனால் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எனக்கு எந்த பொறுப்பை கொடுத்தாலும் அதை செய்ய நான் தயாராக தான் இருக்கின்றேன்.
ஆனால் காலம் என்ன வைத்திருக்கிறது என்று பார்ப்போம் என்று கூறினார். கம்பீர் குறித்து பேசிய கங்குலி, பயிற்சியாளராக தன்னுடைய பணியை கம்பீர் நன்றாக செய்கின்றார். எனினும் ஆரம்பத்தில் கொஞ்சம் தோல்விகளை சந்தித்தாலும் அதன் பிறகு அணியின் சிறப்பாக வழி நடத்தி சாம்பியன்ஸ் கோப்பையை வென்று கொடுத்து இருக்கிறார்.
தற்போது இங்கிலாந்து தொடர் அவருக்கு மிகப்பெரிய ஒரு தொடராக இருக்கும். கம்பீர் கிரிக்கெட் மீது பற்று கொண்ட நபராக உள்ளார். அவரை ஒரு வீரராக நான் பார்த்திருக்கின்றேன். ஆனால் பயிற்சியாளராக அருகில் பார்த்ததில்லை. இதனால் அவர் எப்படி செயல்படுகிறார் என்று எனக்கு தெரியவில்லை. எனினும் அவர் தற்போது தான் இந்த பணியை தொடங்கி இருக்கின்றார்.
மேலும் அவர் பயிற்சியாளராக வளர்வார் என்று நம்புகிறேன் என்றும் கங்குலி கூறியுள்ளார். கங்குலி தற்போது வெளிப்படையாக பயிற்சியாளர் பதவிக்கு வர தயார் என்று கூறிவிட்டதால் இது கம்பீருக்கு சிக்கலை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.