பிர்மிங்காம்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் அபாரமாக ஆடிவந்த நிலையில், அவரை குழப்பமடையச் செய்து விக்கெட்டை வீழ்த்த இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் முயற்சி செய்தார். ஆனால், சுப்மன் கில் சுதாரித்து அதிலிருந்து தப்பினார். இந்த சம்பவத்தால் இங்கிலாந்து அணி ஏமாற்று விக்கெட்டை வீழ்த்த முயற்சி செய்கிறதா என்ற கேள்வி தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நேற்று எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் துவங்கியது. இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணி முதல் நாள் அன்று முதல் இன்னிங்ஸ் பேட்டிங் ஆடியது. கே.எல். ராகுல் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். கருண் நாயர் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் கேப்டன் சுப்மன் கில் இணைந்து ஆடினார்.

அப்போது போட்டியின் 34வது ஓவரில் இந்தச் சம்பவம் நடந்தது. இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் பிரைடன் கார்ஸ், பந்துவீச ஓடி வரும்போது திடீரென தனது கையை 'நோ-பால்' என்பது போல சைகை செய்தபடி ஓடி வந்தார். இதன் மூலம், தான் நோ-பால் வீசப்போகிறேன் என்று சைகை செய்து, சுப்மன் கில்லின் கவனத்தைத் திசை திருப்புவதற்கு முயற்சி செய்தார்.
ஆனால், பிரைடன் கார்ஸ் தனது கவனத்தைத் திசை திருப்புகிறார் என்பதை உணர்ந்த கேப்டன் சுப்மன் கில் உடனடியாக பேட்டிங் செய்வதை நிறுத்தி சற்று விலகினார். அப்படி இருந்தும் பிரைடன் தனது பந்தை வீசி முடித்தார். பின்னர், நடுவரிடம் சுப்மன் கில் ஏன் விலகினேன் என்பதைப் பற்றி விளக்கினார். பிரைடன் கார்ஸ் நோ-பால் என சைகை செய்ததை பற்றியும் கூறினார். அந்த பந்து செல்லாது என அம்பயர் அறிவித்தார்.
இந்தச் சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற 'சின்னப்பிள்ளைத்தனமான' வேலைகளை இங்கிலாந்து அணி ஏன் செய்து வருகிறது என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இது கிரிக்கெட்டின் விளையாட்டு உணர்வுக்கு எதிரானது என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த போட்டியில் அபாரமாக ஆடிய கேப்டன் சுப்மன் கில் முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் 114 ரன்களுடன் களத்தில் இருந்தார். ரவீந்திர ஜடேஜா 41 ரன்களுடன் களத்தில் இருக்கிறார். இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 85 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.