மும்பை: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய டி20 தொடரில் 4 - 1 என வீழ்த்தி இருக்கும் நிலையில் ஏமாற்று வேலை செய்து இந்திய அணியின் வெற்றிக்கு களங்கம் ஏற்படுத்தாதீர்கள் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையான விமர்சனத்தை முன் வைத்து இருக்கிறார். இது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய இந்த டி20 தொடரின் நான்காவது போட்டியில் ஒரு சர்ச்சை எழுந்தது. சிவம் துபேவுக்கு தலையில் பந்து தாக்கியதால் அவர் பாதி போட்டியில் விலகினார். இதுபோல தலையில் பந்து தாக்கியதால் ஒரு வீரரால் ஆட முடியாமல் போனால், அவருக்கு பதிலாக இணையான மாற்று வீரரை பாதி போட்டியில் இருந்து ஆட வைக்கலாம்.

இணையான மாற்று வீரர் என்றால் ஒரு பேட்ஸ்மேனுக்கு பதிலாக பேட்ஸ்மேன், ஆல் ரவுண்டருக்கு பதிலாக ஆல் ரவுண்டர், ஸ்பின்னருக்கு பதிலாக ஸ்பின்னர் இவ்வாறு மட்டுமே மாற்று வீரரை தேர்வு செய்ய வேண்டும்,
அதாவது ஃபீல்டிங் மட்டும் என்று இல்லாமல், அப்படி மாற்று வீரராக வருபவர் மீதமுள்ள போட்டியில் பவுலிங் அல்லது பேட்டிங்கும் செய்யலாம். இந்த நிலையில் சிவம் துபேவுக்கு காயம் ஏற்படாமலேயே இந்திய அணியில் மாற்று வீரரை விளையாட வைத்ததாக ஒரு தரப்பும், சிவம் துபேவுக்கு காயம் ஏற்பட்டு இருந்தாலும் கூட ஹர்ஷித் ராணா அவருக்கு இணையான மாற்று வீரர் இல்லை என மற்றொரு தரப்பும் இந்திய அணியை விமர்சித்து வருகிறது.
இந்த நிலையில் சுனில் கவாஸ்கர் நேரடியாகவே இந்திய அணியை தாக்கிப் பேசி இருக்கிறார். சிவம் துபேவுக்கு காயமே ஏற்படவில்லை என அவர் அதிரடியாக கூறி இருக்கிறார். இந்திய அணி இது போன்ற ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவதால் அந்த வெற்றிக்கு தான் களங்கம் எனவும் அவர் விமர்சித்து இருக்கிறார்.
இது பற்றி சுனில் கவாஸ்கர் பேசுகையில், "புனே போட்டியில் சிவம் துபே தலையில் பந்து தாக்கியதற்கு பின்னரும் பேட்டிங் செய்தார். எனவே, அவருக்கு மூளை அதிர்ச்சி ஏதும் ஏற்படவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. எனவே, அவருக்கு பதிலாக ஒரு மாற்று வீரரை ஆட வைத்தது சரியான விஷயம் இல்லை."
"ஒருவேளை பேட்டிங் செய்த போது அவருக்கு தசை பிடிப்பு ஏற்பட்டு இருந்தால் மாற்று வீரரை ஆட வைக்கலாம். ஆனால், அந்த மாற்று வீரர் ஃபீல்டிங் மட்டும் தான் செய்வார். நிச்சயமாக பவுலிங் செய்ய முடியாது. இணையான மாற்று வீரரை தேர்வு செய்ய வேண்டும் என்று மட்டும் வைத்துக் கொண்டாலும் கூட, சிவம் துபேவுக்கும், ராணாவுக்கும் எந்த வகையிலும் இணையான விஷயங்கள் இல்லை."
"அவர்கள் இருவரும் ஒரே உயரம் உடையவர்கள், ஒரே மாதிரி ஃபீல்டிங் திறன் உடையவர்கள் என்று வேண்டுமானாலும் ஒரு வேடிக்கைக்கு சொல்லலாம். அதைத் தவிர அவர்கள் இருவரும் இணையான மாற்று வீரர்கள் என சொல்வதற்கு ஒன்றுமில்லை. எனவே, இங்கிலாந்து அணி அவர்களுக்கு எதிராக ஒரு விஷயம் நடந்திருப்பதாக நினைப்பதற்கு அனைத்து காரணங்களும் உள்ளன. இந்திய அணி அற்புதமான அணி. ஆனால், இது போன்ற மோசமான செயல்களை செய்து அதன் வெற்றிகளை களங்கம் அடைய வைக்க வேண்டிய அவசியமில்லை." என்று கூறி இருக்கிறார்.