புனே: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டி இன்று புனேவில் தொடங்குகிறது. இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள நிலையில் நான்காவது டி20 போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடும்.
இந்த சூழலில் இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டாலும் பேட்டிங்கில் கடுமையாக தடுமாறி வருகிறார். கடந்த ஐந்து இன்னிங்ஸ்களில் சூரியகுமார் ஒருமுறை கூட 15 ரன்கள் தொடவில்லை.

கடந்த 15 இன்னிங்ஸ்களில் சூரியகுமார் யாதவ், இரண்டு முறை தான் அரைசதம் அடித்திருக்கிறார். இதனால் சூரியகுமார் யாதவ் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று விமர்சனம் எழுந்து வருகிறது. இதனால் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது மற்றும் ஐந்தாவது டி20 போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் துணை பயிற்சியாளர் டென் டோசேட், சூரியகுமார் யாதவ் குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார். அதில், "சூரியகுமார் பேட்டிங்கில் தன்னுடைய திறமையை பலமுறை நிரூபித்து
இருக்கிறார். தனக்கென உச்சவரம்பை அவர் நிர்ணயித்து விட்டார்".
"டி20 கிரிக்கெட் பொறுத்தவரை ஒரே மாதிரி ரன்கள் அடிப்பது என்பது மிகவும் கடுமையான விஷயம். நாங்கள் எங்கள் அணி வீரர்களிடம் களத்திற்கு சென்று அதிரடியாக விளையாடுங்கள். வேகமாக ரன் குவியுங்கள் என்று தான் கூறுகிறோம்.
எனவே இப்படி அதிரடியாக விளையாடும் போது சில முறை சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க வாய்ப்பு இருக்கிறது".
"அப்படி ஒரு கட்டத்தில் தான் தற்போது சூரியகுமார் யாதவ் இருக்கின்றார். பயிற்சியில் ஒரு வீரர் எப்படி செயல்படுகிறார்? வலைப்பயிற்சியில் எப்படி பேட்டிங் செய்கிறார். களத்தில் எந்த மாதிரி ஷாட்களை அவர் ஆடுகிறார் என்பதை
நாங்கள் பார்க்கிறோம். சூரியகுமார் யாதவ், கடந்த ஆட்டத்தில் இரண்டு அபாரமான ஷாட்டை ஆடினார். எனவே அவர் பார்மில் இல்லை என்று சொல்ல முடியாது".
"சூர்யகுமார் மீண்டும் ரன் குவிக்க அதிக போட்டியை எடுத்துக் கொள்ள மாட்டார். அவர் எங்கள் அணியின் கேப்டன். அதுமட்டுமில்லாமல் பயிற்சியாளர் கம்பீர், இது போன்ற வீரர்களுக்கு அதிக வாய்ப்புகளை கொடுப்பார். உலகின்
சிறந்த டி20 பேட்ஸ்மேன் அவர். எனவே சூரியகுமார் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. அவர் இரண்டு அதிரடி ஷாட்களை ஆடி ரன்களை சேர்த்தால் நிச்சயம் ஃபார்முக்கு வந்து விடுவார்" என்று டென் டோசேட் கூறியுள்ளார்.