மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் நான்குக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றி இருக்கிறது. சூரியகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி t20 போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு வருகிறது.
கேப்டன் சூரியகுமார் யாதவ் களத்தில் சூப்பர் கம்ப்யூட்டர் போல் செயல்பட்டு வருகிறார். ஆனால் பேட்டிங்கில் மட்டும்தான் அவர் தடுமாறி வருகிறார். எனினும் அணி வெற்றி பெறும் வரை அவருடைய பேட்டிங் குறித்து எந்த ஒரு கேள்வியும் எழுப்பப்படாது.

இந்த நிலையில் வெற்றி குறித்து சூரியகுமார் யாதவ் பேசிய கருத்துக்களை தற்போது பார்க்கலாம். "களத்தில் நிற்கும் போது மனதில் என்ன தோன்றுகிறதோ, அதை நாங்கள் சரியாக செய்கின்றோம். யாருக்கெல்லாம் பந்து வீச தெரியுமோ, அவர்கள் விக்கெட்டுகள் எடுப்பார்கள் என நம்பி அவர்களிடம் பந்துகளை நாங்கள் தருகின்றோம்".
"இந்த தொடருக்கு முன்பு நாங்கள் ஒரு அணியாக இதை தான் நாங்கள் பேசினோம். இந்த திட்டத்தை தான் நாங்கள் செயல்படுத்திருக்கிறோம். இந்த ஸ்டைலில் தான் நாங்கள் கிரிக்கெட் விளையாட விரும்புகிறோம். இனி இதுதான் எங்களுடைய ஸ்டைல். இதை நாங்கள் தொடர்ந்து பாலோ செய்வோம். டி 20 கிரிக்கெட் எப்போதுமே ஹை ரிஸ்க் கொண்ட போட்டியாகும்".
"ரிஸ்க் அதிகமாக எடுக்கும் போது நமக்கு பலன்களும் அதிகமாக கிடைக்கும். இன்றைய ஆட்டத்தில் கூட எங்களுக்கு எதிர்பார்த்த முடிவுகள் கிடைத்தது. அபிஷேக் ஷர்மாவின் குடும்பத்தினரை நினைத்து நான் மகிழ்ச்சி கொள்கின்றேன். அவர்கள் இந்த ஆட்டத்தை மகிழ்ச்சியுடன் பார்த்திருப்பார்கள்".
"இது உண்மையிலே சிறந்த ஆட்டம் தான். வருண் சக்கரவர்த்தி தன்னுடைய பந்துவீச்சு மட்டும் அல்லாமல் பில்டிங்களும் கடுமையாக உழைத்து வருகிறார். அவருக்கு எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் பயிற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இன்றைய ஆட்டத்தில் கூட அவர்தான் நான் இன்று பவுண்டிரி லைனில் பில்டிங் செய்ய விரும்புகிறேன் என்று கூறினார்.
அவர் உழைத்த உழைப்புக்கான முடிவுகளை தான் நீங்கள் களத்தில் பார்க்கிறீர்கள். அவர் எப்போதுமே உழைப்பை நம்பக்கூடிய வீரராக இருக்கின்றார்" என்று சூரியகுமார் யாதவ் பாராட்டியுள்ளார்.