கொல்கத்தா : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி கேப்டன் சூரியகுமார் யாதவ் டக் அவுட் ஆனது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. டி20 கிரிக்கெட்டில் ஒரு காலத்தில் நம்பர் ஒன் வீரராக சூரியகுமார் யாதவ் இருந்தார். சூரியகுமார் களத்திற்கு வந்தாலே எதிரணி வீரர்கள் அஞ்சுவார்கள்.
மைதானத்தில் 360 டிகிரி சுற்றியும் தனது பேட்டிங் மூலம் சூரியகுமார் பட்டையை கிளப்புவார். இதன் காரணமாக சாதாரண வீரராக அணியில் வந்த சூரியகுமார் இரண்டே ஆண்டுகளில் இந்திய டி20 அணியின் கேப்டனாக உருவெடுத்தார்.

இந்த நிலையில் சூரியகுமார் யாதவுக்கு கேப்டன்சி நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறதா என கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் அவர் கடைசியாக வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டியில் 75 ரன்கள் விளாசினார். ஆனால் அதன் பிறகு சூரியகுமார் யாதவ், ஒரு முறை கூட 25 ரன்கள் தொடவில்லை. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டர்பனில் நடைபெற்ற டி20 போட்டியில் சூரியகுமார் 21 ரன்கள் எடுத்தார்.
அதன் பிறகு 4,1 என ஆட்டம் இழந்த சூரியகுமார் யாதவ், தற்போது இங்கிலாந்துக்கு எதிராக முதல் டி20 போட்டியில் டக் அவுட் ஆகியிருக்கிறார். இதன் மூலம் கடைசியாக விளையாடிய மூன்று இன்னிங்ஸ்களின் சூரியகுமார் மொத்தமாகவே ஐந்து ரன்கள் தான் அடித்திருக்கிறார். இது ரசிகர்களை வேதனை அடைய செய்திருக்கிறது. இதேபோன்று இன்றைய ஆட்டத்தில் சூரிய குமார் யாதவ் நான்காவது வீரராக வருவதற்கு பதில் மூன்றாவது வீரராகவே களத்திற்கு வந்தார்.
சூரியகுமார் அதிரடியாக ஆடுகிறேன் என்ற பெயரில், களத்திற்கு வந்த உடனே பேட்டை சுத்தி ஆட்டம் இழந்து வருகிறார். இதனால், பார்மை மீட்கும் வரையில் கொஞ்சம் சூரியகுமார் பொறுமை காக்க வேண்டும் என்ற கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சூரியகுமார் யாதவ், டி20 கிரிக்கெட்டில் ஒரு வீரராக சராசரியாக 43.40 என்று ஆவரேஜ் வைத்திருக்கிறார்.
ஆனால் கேப்டனாக அவருடைய சராசரி 31.17 என்ற அளவு குறைந்து இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் சர்வதேச t20 கிரிக்கெட் வரலாற்றில் சூரிய குமார் தொடர்ந்து மூன்று போட்டிகளில் சிங்கிள் டிஜிட்டல் ஆட்டம் இழந்து இருப்பது இதுவே முதல் முறையாகும். இதனால் இந்த தொடரில் சூரிய குமார் தன்னுடைய பார்மை மீட்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.