மும்பை: 2026 டி20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இங்கிலாந்து வீரர் ஜேக்கப் பெத்தேல் தனி ஒருவனாக சதம் அடித்து இந்திய அணிக்கு கடும் நெருக்கடி அளித்தார். அப்போது இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் வகுத்த சாதுரியமான பந்துவீச்சு வியூகத்தால் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 253 ரன்கள் என்ற மிகப்பெரிய ஸ்கோரை பதிவு செய்தது. 254 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி, ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், ரன் விகிதத்தை ஒரு ஓவருக்கு 12 ரன்கள் என்ற அளவில் குறையாமல் பார்த்துக் கொண்டது. ஒரு முனையில் ஜேக்கப் பெத்தேல் மிகச் சிறப்பாக விளையாடி 45 பந்துகளில் சதம் அடித்து இந்திய பந்துவீச்சாளர்களைத் திணறடித்தார்.
ஆட்டத்தின் கடைசி ஐந்து ஓவர்களில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 69 ரன்கள் தேவைப்பட்டன. அந்த கட்டத்தில் இந்திய அணியில் பும்ராவுக்கு இரண்டு ஓவர்களும், அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோருக்கு தலா ஒரு ஓவரும் மீதமிருந்தன. இந்த நெருக்கடியான நிலையில், சுழற்பந்து வீச்சாளர் அக்சரை கடைசி வரை வைத்திருக்கக் கூடாது, முன்பே பயன்படுத்தி விட வேண்டும் என்றுதான் பொதுவாக கருதுவார்கள். ஆனால், அக்சரை பந்துவீச அழைக்காமல், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 16வது ஓவரை வீச பும்ராவை அழைத்தார். அந்த ஓவரில் பும்ரா 8 ரன்கள் மட்டுமே வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து 17வது ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் 16 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதனால் ஆட்டம் மீண்டும் இங்கிலாந்து பக்கம் திரும்புவது போல் இருந்தது. ஆடுகளத்தில் பெத்தேல் நல்ல நிலையில் இருந்ததால், சூர்யகுமார் யாதவ் மீண்டும் 18வது ஓவரை வீச பும்ராவையே அழைத்தார். பும்ராவை இறுதி ஓவருக்கு வைக்காமல், முன்கூட்டியே வீச வைத்தது ஒரு சிறந்த முடிவாக அமைந்தது.
அந்த முக்கியமான ஓவரில் பும்ரா வெறும் 6 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதனால் கடைசி இரண்டு ஓவர்களில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 39 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. பும்ராவை முன்கூட்டியே பயன்படுத்தி ஓவர்களை முடித்தது இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

19வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். அந்த ஓவரில் அதிரடி வீரர் சாம் கர்ரனின் விக்கெட்டை அவர் வீழ்த்தினார். மேலும் 9 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்ததால், கடைசி ஓவரில் வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டது. பெத்தேல் களத்தில் இருந்ததால் அவர் 5 சிக்ஸர்கள் அடித்தால் இங்கிலாந்து வெற்றி பெறும் என்ற பதற்றம் நிலவியது. கடைசி ஓவரை அக்சர் பட்டேல் வீசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆறாவது பந்துவீச்சாளரான சிவம் துபேவிடம் பந்தைக் கொடுத்தார்.
அந்த ஓவரின் முதல் பந்திலேயே இரண்டு ரன்கள் எடுக்க ஆசைப்பட்டு பெத்தேல் ரன் அவுட் ஆனார். இது இந்திய அணிக்கு மிகப்பெரிய நிம்மதியைக் கொடுத்தது. அதன் பிறகு ஜோஃப்ரா ஆர்ச்சர் கடைசி மூன்று பந்துகளிலும் தொடர்ச்சியாக மூன்று சிக்ஸர்களை அடித்தார்.

சிவம் துபே அந்த ஓவரில் 22 ரன்களை விட்டுக் கொடுத்தாலும், இங்கிலாந்து அணி இலக்கை எட்ட முடியாமல் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஐந்து பந்துவீச்சாளர்களை மட்டுமே வைத்து சமாளித்து வந்த நிலையில், நெருக்கடியான நேரத்தில் சூர்யகுமார் யாதவ் எடுத்த துணிச்சலான முடிவு இந்திய அணியின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தது.