ராஜ்கோட் : இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் 14 ரன்களில் ஆட்டம் இழந்தது ரசிகர்களை சோகம் அடைய வைத்திருக்கிறது. மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற சூரியகுமார் முதலில் இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்ய பணித்தார்.
இதை அடுத்து இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி ஆரம்பம் முதல் தடுமாறியது. சஞ்சு சாம்சன் 3 ரன்களிலும், அபிஷேக் ஷர்மா 24 ரன்களிலும் ஆட்டமிழக்க, இந்திய அணி 31 ரன்கள் சேர்ப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்த நிலையில் நல்ல பார்மில் இருக்கும் திலக் வர்மா மூன்றாவது வீரராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கேப்டன் சூரியகுமார் யாதவ் களத்திற்கு வந்தார். சூரியகுமார் யாதவ், கடந்த சில இன்னிங்ஸ்களாக தொடர்ந்து தடுமாறி வருகிறார். இதனால் இன்று அவர் பெரிய ஸ்கோர் அடித்து அணியை காப்பாற்றுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் சூரிய குமார் யாதவ் கேப்டன் ஆன பிறகு பெரிய அளவில் சோபிக்கவில்லை. வங்கதேசத்துக்கு எதிராக மட்டும் அவர் அரை சதம் கடந்தார். ஆனால் அதன் பிறகு தொடர்ந்து தடுமாறி வருகிறார். இன்றைய ஆட்டத்தில் கூட சூரியகுமார் ஒரு சிக்ஸ் ஒரு பவுண்டரி அடிக்க 7 பந்துகளில் 14 ரன்கள் சேர்த்தார்.இதனால் சூரிய குமார் இன்று ரசிகர்களுக்கு வாண வேடிக்கை காட்டப் போகிறார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் மார்க் வுட் வீசிய பந்தை தேவையில்லாத ஷாட் ஆடி விக்கெட் கீப்பர் இடமே சூரியகுமார் யாதவ் ஆட்டம் இழந்தார். இதன் மூலம் சூரிய குமார் கடந்த ஐந்து இன்னிங்ஸ்கலில் ஒருமுறை கூட 15 ரன்கள் தொடவில்லை. இன்னும் சொல்லப்போனால் கடைசியாக டி20 கிரிக்கெட்டில் அவர் 15 இன்னிங்ஸ்களில் வெறும் இரண்டு முறை தான் அரை சதம் அடித்திருக்கிறார்.இதனால் கேப்டனான பிறகு சூரியகுமார் யாதவ் ஆல் பேட்டிங்கில் கவனம் செலுத்த முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.