மும்பை: சஞ்சு சாம்சனை பிளேயிங் லெவனில் சேர்ப்பது குறித்து பேசியதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் விமர்சனங்களைச் சந்தித்தார். இருப்பினும், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முக்கியமான போட்டியில் சாம்சன் ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் குவித்து, இந்தியாவை டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு அழைத்து சென்றார்.
சாம்சனை பிளேயிங் லெவனில் கொண்டு வருவது குறித்து கேள்விக்கு, அபிஷேக் சர்மாவை எப்படி நீக்குவீங்க என்று சூர்யகுமார் யாதவ் அளித்த பதிலுக்கு பலத்த கண்டனங்கள் எழுந்தன. சாம்சன் பின்னர், கொல்கத்தாவில் ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் எடுத்து வாழ்நாளின் சிறந்த இன்னிங்ஸை பதிவு செய்த பிறகும், அவருக்கு எதிரான கேலி கிண்டல்கள் உச்சமடைந்தன.

கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் சாம்சனின் அற்புதமான ஆட்டம் இந்தியாவை டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்குள் நுழைய வைத்தது. அவர் 12 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 196 ரன்கள் இலக்கை இந்தியா 4 பந்துகள் மீதமிருக்க எட்டச் செய்தார். இதனால் சாம்சனுக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது. இதற்கிடையில், சஞ்சு சாம்சனின் தந்தை சாம்சன் விஸ்வநாத், சூர்யகுமார் மீது புகழாரம் சூட்டினார்.
இது குறித்து பேசிய விஸ்வநாத், “சூர்யா என் மகன் போன்றவர். அவருக்கு ஈகோ என்பது துளிகூட கிடையாது. அவர் தனது அணி வீரர்களை அங்கீகரித்து, அவர்களை ஆதரிக்கவும் செய்கிறார்,” என்றார்.அவர் ஒரு உண்மையான கேப்டன். சூர்யகுமார் சஞ்சுவுக்கு எவ்வளவு ஆதரவளிக்கிறார் என்பது நாம் அறிந்ததே. அவரது வார்த்தைகளை அந்த அளவுக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது. அவர் பேசும் விதத்தில் ஒரு சிறிய வேறுபாட்டை நாம் பார்க்க வேண்டும்,” எனக் குறிப்பிட்டார்.
“செய்தியாளர் சந்திப்பில் அவர் சொன்னது வேண்டுமென்றே இல்லை. சூர்யாவையும், கம்பீரையும் தவிர, வேறு யாரும் சஞ்சுவுக்கு இவ்வளவு ஆதரவு கொடுத்ததில்லை. சூர்யாவும் எனக்கு மகன் போன்றவர்தான்,” என்று நெகிழ்ச்சியுடன் சாம்சன் விஸ்வநாத் தெரிவித்தார்.
அபிஷேக் ஷர்மா தொடர்ச்சியாக மூன்று டக் அவுட்களைச் சந்தித்து பெரும் தோல்வியைத் தழுவியதால், சாம்சனை மீண்டும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. எனினும், கேப்டன் சூர்யகுமார் யாதவ், அணி தற்போது அணி சிறப்பாகச் செயல்படுவதாகவும், எந்த மாற்றமும் தேவையில்லை எனவும் தெரிவித்தார்.

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான சூப்பர் 8 போட்டிக்கு முன்னதாக, ஒரு செய்தியாளர் சஞ்சுவின் அணித் தேர்வு குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு சூர்யகுமார் யாதவ் நகைச்சுவையாகவே, “அபிஷேக்கிற்குப் பதிலாக அவனை நான் ஆட வைக்க வேண்டும் என்று சொல்கிறீர்களா?” என்று திருப்பிக் கேட்டார்.அதற்கு, 'ஓப்பனராக இல்லாமல், சஞ்சுவை மூன்றாவது பேட்ஸ்மேனாகக் கொண்டு வரலாம்' என்று அந்தச் செய்தியாளர் பதிலளித்தார். உடனே சூர்யா, “திலக் வர்மாவுக்குப் பதிலாக சஞ்சுவை ஆட வைக்க வேண்டுமா?” என்று கேட்டு பலமாகச் சிரித்தார்.