மும்பை: டி20 உலக கோப்பை 2026 ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு இந்திய அணி நான்காவது முறையாக தகுதி பெற்று அசத்தியிருக்கிறது. டாஸ் வென்று முதலில் இங்கிலாந்த அணி பந்து வீசியது. 20 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 253 ரன்கள் எடுத்தது.
இந்த போட்டியில் இந்திய அணி மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து அணியை 246 ரன்கள் வரை அடிக்க விட்டு வெறும் 7 ரன்கள் வித்தியாசத்தில் தான் இந்தியா வெற்றி பெற்றது.

எனினும் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றதால் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த சூழலில் வெற்றி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் சூரியகுமார் யாதவ், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருப்பது நம்ப முடியாத விஷயமாக இருக்கின்றது. சொந்த மண்ணில் இந்திய அணியை வழிநடத்தி இறுதிப்போட்டிக்கு அழைத்துச் செல்வது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது.

சஞ்சு சாம்சனுக்கு என்னுடைய பாராட்டுக்கள் அவருக்கு பேட்டிங்கில் என்ன செய்ய வேண்டும் என்று நன்றாக தெரியும். இப்படி ஒரு அதிரடி ஆட்டத்தை தான் தொடக்க வீரர்களிடமிருந்து நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இது அவருடைய நேரம். நான் டாஸ் போடும் போது ஹாரி புரூக்கிடம் உங்கள் அணிக்கு எதிராக நாங்கள் எவ்வளவு ஸ்கோர் இலக்காக நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கேட்டேன்.
ஏனென்றால் அந்த அணியின் பல அதிரடி வீரர்கள் இருக்கிறார்கள். எங்கள் அணியில் பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு போட்டியை தங்கள் பக்கம் இழுத்து வெற்றி பெற்றிருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு பும்ராவின் சிறப்பான பந்துவீச்சும் ஒரு காரணம். இதேபோன்று எங்களுடைய வீரர்கள் இன்று பில்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள்.
அதற்கு எங்களுடைய பில்டிங் பயிற்சியாளர் திலீப்புக்கு தான் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்ள வேண்டும். எங்கள் வீரர்கள் பில்டிங்கில் சிறந்த பங்களிப்பை செலுத்தினார்கள். அது இன்று போட்டியில் தெரிந்தது. பேட்டிங் வரிசையில் முதல் மூன்று வீரர்கள் மட்டும்தான் ஒரே மாதிரி இருக்கும். அதன் பிறகு பேட்டிங் வரிசை கண்டிப்பாக சூழலுக்கு ஏற்ப மாறும். ரஷீத் பந்து வீச வரும்போது சிவம் துபே தான் அதனை எதிர்கொள்ள சரியான நபர் என்று நாங்கள் நினைத்தோம்.
நான் களத்தில் இருக்கும்போது உண்மையிலேயே நான் பதற்றத்துடன் இருந்தேன். என்னுடைய இதயத்துடிப்பு நிச்சயம் 160 லிருந்து 175 முறை மணிக்கு துடித்திருக்கும். இந்தப் போட்டி ஆரம்பவதற்கு முன்பே மைதானத்தில் 80 சதவீதம் பேர் ரசிகர்கள் நிரம்பி இருந்தனர். இவ்வளவு பெரிய ரசிகர்கள் பட்டாளத்திற்கு நல்ல ஒரு பொழுதுபோக்கை கொடுக்க வேண்டும் என்று நினைத்தோம்.

இந்திய மண்ணில் கோப்பையை வெல்ல நாங்கள் இறுதிப் போட்டிக்கு செல்கின்றோம். நிச்சயம் அழுத்தம் இருக்கும். ஆனால் இறுதிப் போட்டியில் விளையாட எங்களுடைய வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் அனைவரும் உற்சாகத்தில் இருக்கின்றனர் என்று சூரியகுமார் தெரிவித்துள்ளார்.