மும்பை : இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி புதன்கிழமை நாளை மாலை 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர். இந்த சூழலில் இந்திய அணி கேப்டன் சூரியகுமார் யாதவ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது சாம்பியன்ஸ் கோப்பை தொடர்பான கேள்விகள் சூரியகுமார் யாதவிடம் கேட்கப்பட்டது. அதில் அதிரடி வீரராக இருக்கும் தாங்கள் இந்திய ஒரு நாள் அணியில் இருந்து நீக்கப்பட்டது உங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தவில்லையா என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

இதற்கு பதிலளித்த சூரியகுமார் யாதவ், "நான் எதற்கு காயப்பட வேண்டும் நான் சரியாக விளையாடி இருந்தால், என்னை தேர்வு குழுவினர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சேர்த்திருப்பார்கள். நான் சரியாக விளையாடவில்லை என்றால் என்னை சேர்க்க மாட்டார்கள். எனவே நான் சரியாக விளையாடவில்லை என்பதுதான் உண்மை.
அதை ஏற்றுக் கொள்ள வேண்டிய பக்குவம் எனக்கு இருக்கிறது. தற்போது சாம்பியன்ஸ் கோப்பை தொடர்பான அணியில் தேர்வு செய்துள்ள வீரர்களை பாருங்கள். அனைவருமே திறமை வாய்ந்தவர்கள். அணியில் இருக்கும் 15 வீரர்களும் நன்றாக விளையாடி இருக்கிறார்கள். இந்திய அணிக்காக விளையாடிய போட்டிகள் அனைத்திலும் நன்றாக ரன்கள் சேர்த்திருக்கிறார்கள்.
குறிப்பாக டொமஸ்டிக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிருக்கிறார்கள். எனவே இந்திய அணிகள் தேர்வான வீரர்களை நினைத்து நான் மகிழ்ச்சி தான் கொள்கிறேன். நான் சரியாக விளையாடவில்லை என்று நினைக்கும் போது அது நிச்சயம் எனக்கு கவலையை தருகிறது. ஆனால் நான் நன்றாக விளையாடியிருந்தால் என்னையும் தேர்வு செய்திருப்பார்கள்.
நான் நன்றாக விளையாடவில்லை என்பதால் என்னை விட ஒரு சிறந்த வீரருக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்பது தான் உண்மை. சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பும்ரா, ஷமி போன்ற வீரர்கள் இடம் பிடித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இணைந்து விளையாடும் போது மற்ற அணிக்கு அது நிச்சயம் கடும் நெருக்கடியை கொடுக்கும். இவர்கள் இருவரும் கடைசியாக 2023 உலக கோப்பையில் இணைந்து பந்து வீசினார்கள். தற்போது சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இணைந்து விளையாடுவார்கள் என்று நான் நம்புகிறேன்"என்று சூரியகுமார் யாதவும் கூறியுள்ளார்.