மும்பை: இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக அக்சர் பட்டேல் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. அந்த தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அந்த டி20 அணியின் துணை கேப்டனாக அக்சர் பட்டேல் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இது அவருக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், இதற்கு முன் அக்சர் பட்டேல் இந்திய அணியில் ஒரு மாற்று வீரராக மட்டுமே இருந்துள்ளார்.

பேட்டிங் வரிசையில் எந்த இடத்திலும் இறங்கி ஆடும் ஆற்றலும், சுழற் பந்துவீச்சில் கட்டுக்கோப்பாக பந்து வீசி விக்கெட் வீழ்த்தும் ஆற்றலையும் உடைய அக்சர் பட்டேலுக்கு இந்திய அணியில் இதுவரை சரியான வாய்ப்பு வழங்கப்படவில்லை. டெஸ்ட் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் ஆதிக்கத்தாலும், குறைந்த ஓவர் போட்டிகளில் சாஹல், குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோரின் ஆதிக்கத்தாலும், அக்சர் பட்டேலுக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்தது.
கடந்த ஓராண்டாக சாஹலை பிசிசிஐ ஒதுக்கி வைத்துள்ளது. ரவீந்திர ஜடேஜா டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று இருக்கிறார். இந்த நிலையில், அக்சர் பட்டேலுக்கு கடந்த சில மாதங்களாக இந்திய டி20 அணியில் அதிக வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. ஆனாலும், அவர் ஒரு தொடரின் அனைத்து போட்டிகளிலும் விளையாடும் வாய்ப்பை பெறுவாரா? இல்லையா? என்ற சந்தேகத்துடனே ஆடி வந்தார்.
ஆனால் முதன்முறையாக அவரது அர்ப்பணிப்புக்கு பரிசளிக்கும் வகையில் பிசிசிஐ அவருக்கு துணை கேப்டன் பதவியை வழங்கி இருக்கிறது. அதன் மூலம், அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரின் அனைத்து போட்டிகளிலும் நிச்சயம் விளையாட முடியும். துணை கேப்டன் என்பதால் அனைத்து போட்டிகளிலும் அவரை ஆட வைத்து தான் ஆக வேண்டும்.
இது அக்சருக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பாக உள்ளது. இந்தப் தொடரில் அக்சர் பட்டேல் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போது அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கக் கூடும்.