மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. அந்த தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ தேர்வுக் குழு அறிவித்து இருக்கிறது. இந்த அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
இந்தியா - இங்கிலாந்து டி20 தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி வீரர்கள் பட்டியல் - சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல் (துணை கேப்டன்), ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்).
நீண்ட காலமாக காயத்தில் சிக்கி மீண்டு வந்து இருக்கும் முகமது ஷமிக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு டி20 அணியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் துவக்க வீரராக நிலையாக ரன் குவிக்காத அபிஷேக் சர்மாவுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழக சுழற் பந்துவீச்சாளர்களான வருண் சக்கரவர்த்தி மற்றும் வாஷிங்டன் சுந்தருக்கும் இந்த அணியில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டுக்கு அணியில் இடம் அளிக்கப்படவில்லை. சஞ்சு சாம்சன் முதல் விக்கெட் கீப்பராகவும், துருவ் ஜுரல் மாற்று விக்கெட் கீப்பராகவும் இடம் பெற்றுள்ளனர்.
காயத்தில் இருக்கும் வேகப் பந்துவீச்சாளர் பும்ரா டி20 அணியில் தேர்வு செய்யப்படவில்லை. யாரும் எதிர்பாராத வகையில் அக்சர் பட்டேலுக்கு துணை கேப்டன் பதவி அளிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் அவர் பிளேயிங் லெவனில் தவிர்க்க முடியாத வீரராக மாறி இருக்கிறார்.
சுப்மன் கில்லுக்கு டி20 அணியில் இடம் அளிக்கப்படவில்லை. அவர் அடுத்து நடைபெற உள்ள ஒருநாள் தொடரிலும், சாம்பியன்ஸ் ட்ராபி தொடரிலும் விளையாட உள்ளதால் மட்டும் டி20 அணியில் இடம் அளிக்கப்படவில்லையா? அல்லது நிரந்தரமாக அவர் டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
வேகப் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் நிதிஷ் குமாருக்கு டி20 அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. ஹர்திக் பாண்டியாவும் அணியில் இருக்கும் நிலையில் நிதிஷ் குமாருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைப்பது கடினமே. மற்றொரு வேகப் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் சிவம் துபேவுக்கு அணியில் இடம் அளிக்கப்படவில்லை.