மும்பை: டி20 உலக கோப்பை 2026 தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா, இங்கிலாந்தை மும்பை வான்கடே மைதானத்தில் சந்திக்கிறது. மார்ச் 5ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தப் போட்டிக்கு முன்னதாக, மைதானத்தின் பிட்ச் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. பச்சை நிறத் தோற்றத்துடன் காணப்படும் இந்தப் பிட்ச், வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாக அமையுமா அல்லது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்குமா என்ற விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், பிட்ச் தயாரிப்பாளர்களுடன் தீவிரமாகப் பேசும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனால், ஆடுகளம் இந்திய அணிக்கு திருப்தியை அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

பெரும்பாலான வீரர்கள் அரையிறுதிப் போட்டிக்கான பிட்சை பார்க்கவில்லை. பயிற்சியின் போது பிட்ச் பெரும்பாலும் மூடப்பட்டிருந்தாலும், ஒரு குறிப்பிடத்தக்க பகுதியில் மட்டும் புற்கள் காணப்பட்டது. பொதுவாக பேட்டிங்கிற்கு சாதகமான வான்கடே மைதானத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆடுகளம் மிகவும் பச்சையாகத் தெரிந்தது.

மும்பையில் அதிகரிக்கும் வெப்பநிலையால், பிட்ச்சில் உள்ள புல்வெளியை மைதான ஊழியர்கள் தக்கவைத்துள்ளனர். இது ஈரப்பதத்தைப் பாதுகாக்கவும், பிட்ச் வறண்டு போவதைத் தடுக்கவும் உதவும். போட்டிக்கு நெருக்கமான நாட்களில் எவ்வளவு புல் வெட்டப்படும் என்பது, ஆட்டத்தின் தன்மையைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும்.
இந்த சிவப்பு மண் பிட்ச்சில்தான் முன்னதாக இங்கிலாந்து – மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இத்தாலி – நேபாளப் போட்டிகள் நடைபெற்றன. அந்தப் போட்டிகளில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆட்டம் செல்ல, செல்ல கணிசமான உதவியைப் பெற்றனர். இந்த உலகக் கோப்பையில் மெதுவான ஆடுகளங்களில் இந்திய பேட்ஸ்மேன்கள் சிரமப்பட்டதால், இந்தியா இதுபோன்ற பிட்ச்சை விரும்பாமல் இருக்கலாம்.
ரன் குவிப்புக்கு சாதகமான பிட்ச் இந்தியாவின் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சுத் தாக்குதலுக்குச் சாதகமாக அமையும். ஆனால் பனிப்பொழிவு இதைச் சிக்கலாக்கும் வாய்ப்புள்ளது. பனிப்பொழிவு, இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு எளிதாக ரன் சேர்ப்பதற்கு வழிவகுக்கும் என்பதால், டாஸ் முக்கியத்துவம் பெறும்.
இந்தியாவின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் மோர்னே மோர்கல், பிட்ச் குறித்த தனது பார்வையை வெளிப்படையாகப் பகிர்ந்தார். "உண்மையைச் சொல்லப் போனால், ஒரு நாள் முன்னதாக பிட்ச் எப்படி செயல்படும் என்று எங்களுக்குத் தெரியவில்லை. இந்தியாவில் திடீரென்று இவ்வளவு வெப்பம் அதிகரித்துள்ளதால், ஈரப்பதத்தைப் பராமரிப்பது மற்றும் பிட்ச் வறண்டு போவதைத் தடுப்பது முக்கியம்," என்றார்.
"அணித் தேர்வு, ஆட்ட நாளில் நாங்கள் பார்ப்பவற்றைப் பொறுத்து அமையும். அதிலிருந்து, நாங்கள் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும், சூழ்நிலைகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப மாற்றியமைக்க வேண்டும்." என்று மோர்கல் தெரிவித்தார். வெப்பம் காரணமாக பிட்ச்சில் தண்ணீர் தெளிக்கப்பட்டுள்ளதால், ஆடுகளம் மென்மையாக உள்ளது என்றும், துல்லியமாக மதிப்பிடுவது கடினம் என்றும் அவர் குறிப்பிட்டார்.