மும்பை: 2026 டி20 உலக கோப்பை இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டி, பரபரப்பாகத் தோன்றினாலும், உண்மையில் அது நெருக்கடியான ஆட்டம் இல்லை என்று முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கருத்துத் தெரிவித்துள்ளார். கடைசி ஓவரில் 30 ரன்களைக் காக்கும் வசதி இந்திய அணிக்கு இருந்தது இதற்கு காரணம் என்றும் அவர் கூறினார்.
ஹர்திக் பாண்டியாவின் நேர்த்தியான 19வது ஓவர், மும்பை வான்கடே மைதானத்தில் சிவம் தூபேவுக்கு கடைசி ஓவரை எளிதாக வீசும் பணியை அளித்தது. சிவம் தூபே தனது கடைசி ஓவரில் ஜோஃப்ரா ஆர்ச்சர் விளாசிய மூன்று சிக்ஸர்கள் உட்பட 22 ரன்களை விட்டுக் கொடுத்தாலும், 254 ரன்கள் இலக்கைக் காத்து இந்திய அணி ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

ஹர்திக் பாண்டியா 19வது ஓவரில் சாம் கரனின் முக்கிய விக்கெட்டை வீழ்த்தி, வெறும் ஒன்பது ரன்கள் மட்டுமே கொடுத்தபோது, ஆட்டம் அப்போதே முடிந்துவிட்டது என வீரேந்திர சேவாக் தெரிவித்தார்.இது குறித்து பேசிய அவர், "கடைசி ஓவரில் 30 ரன்களை நான் கூட காப்பாற்றியிருப்பேன். இத்தனை ரன்களை விட்டுக்கொடுக்க நான் அனுமதிக்க மாட்டேன். தொடர்ச்சியாக ஐந்து சிக்ஸர்கள் அடிக்க வேண்டும் என்று தெரிந்தால், அது அவ்வளவு எளிதில் நடக்காது."

"நீங்கள் ரிங்கு சிங் இல்லை. சாம் கரனை வீழ்த்திய கேட்ச் சிக்ஸராகியிருந்தால், போட்டி இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்," என்று சேவாக் தெரிவித்தார். இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ராவின் கடைசி ஓவர்களை இறுதிவரை ஒதுக்காமல், டெத் ஓவர்களிலேயே பயன்படுத்தினார். பும்ரா தனது ஓவரை வெறும் ஆறு ரன்களுடன் முடித்தார்.
இது குறித்து பாராட்டிய சேவாக், "பும்ராவின் கடைசி ஓவர் அதிக ரன்களைக் கொடுத்திருந்தால் அல்லது பாதுகாக்க ரன்கள் குறைவாக இருந்திருந்தால், இம்முடிவு தவறாகப் போயிருக்கலாம். ஆனால் அர்ஷ்தீப், பும்ரா, பாண்டியா தங்கள் ஓவர்களை மிகச் சிறப்பாக வீசி, 30 ரன்கள் மட்டுமே மீதமிருந்தது, அதை யார் வேண்டுமானாலும் காப்பாற்றியிருப்பார்கள். எனவே அது ஒரு நல்ல முடிவு, ஆனால் பின்விளைவுகளை ஏற்படுத்தவும் வாய்ப்பிருந்தது," என்றார் அவர்.
ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சாளர்களில் மிகச் சிறந்தவராகத் தனித்து நின்றார். பிளாட் விக்கெட்டிலும் தனது நான்கு ஓவர்களில் வெறும் 33 ரன்கள் மட்டுமே கொடுத்தார். ஐந்தாவது ஓவரில் முதல் பந்திலேயே ஹாரி ப்ரூக்கின் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார்.2026 டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்தின் ரன் சேஸ் குறித்து பேசிய சேவாக், "ஜோஸ் பட்லருக்குப் பதிலாக ஹாரி ப்ரூக் பேட்டிங் செய்ய வந்திருக்க வேண்டும்" என்றார்.

இங்கிலாந்து அணி ரன் துரத்தலின் போது சாதனையான ஸ்கோரை கிட்டத்தட்ட எட்டி, இந்திய அணிக்கு பெரும் சவால் தந்தது. ஜேக்கப் பெத்தேலின் அபார சதம் அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு வந்தாலும், இறுதியில் அவர்களால் இலக்கை எட்ட முடியவில்லை. இதனை சுட்டிக்காட்டி பேசிய அவர், "ஜோஸ் பட்லருக்குப் பதிலாக ஹாரி ப்ரூக் வந்திருக்க வேண்டும். அவர் தாக்கத்தை ஏற்படுத்தி இங்கிலாந்துக்கு சிறந்த தொடக்கத்தைத் தந்திருப்பார். பட்லர் 17 பந்துகளில் 25 ரன்கள் அடித்தார். அதே 17 பந்துகளை வேறு ஒரு பேட்டர் விளையாடி 42 ரன்களோ அதற்கு மேலோ எடுத்திருந்தால், இஷான் கிஷன் செய்தது போல அது வேறுபட்ட தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்," என்று சேவாக் கூறினார்.