மும்பை: டி20 உலக கோப்பை 2026 அரையிறுதியில், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தை வியாழக்கிழமை மும்பை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்கிறது. ஐசிசி டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்துடன் இந்தியா மோதுவது இது மூன்றாவது முறையாகும். 2022-ல் அடிலாய்டிலும், 2024-ல் கயானாவிலும் முன்னதாக இரு அணிகளும் சந்தித்துள்ளன.
ஆரம்ப சவால்களுக்குப் பின், இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது. மறுபுறம், தென்னாப்பிரிக்கா-நியூசிலாந்து அணிகள் ஈடன் கார்டனில் மோதுகின்றன. மும்பையில் போட்டியன்று மழை வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், ஒருவேளை வானிலை குறுக்கிட்டால் போட்டியின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுகிறது.

ஐசிசி அரையிறுதிப் போட்டிக்கு ஒரு ரிசர்வ் நாளை ஒதுக்கியுள்ளது. வியாழக்கிழமை மழை காரணமாக ஆட்டம் தடைபட்டால், அதே நாளில் முடிக்க கூடுதல் 90 நிமிடங்கள் பயன்படுத்தப்படலாம். தேவைப்பட்டால், ஓவர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்படும்.

ஐசிசி விதிமுறைகளின்படி, "ஒரு முடிவை எட்ட, ஒவ்வொரு அணியும் குறைந்தது பத்து ஓவர்கள் பேட் செய்யும் வாய்ப்பு பெற்றிருக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட நாளில் குறைந்தபட்ச ஓவர்கள் சாத்தியமில்லை எனில், ஆட்டம் கைவிடப்பட்டு, ரிசர்வ் நாளில் நிறைவு செய்யவோ அல்லது மீண்டும் தொடங்கவோ உதவும்."
ரிசர்வ் நாளிலும் போட்டி நடத்த முடியாவிட்டால், சூப்பர் 8 பிரிவில் அதிக புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இங்கிலாந்து சூப்பர் 8-ல் மூன்று வெற்றிகள், ஆறு புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்திருந்தது. இந்தியா இரண்டு வெற்றிகள், நான்கு புள்ளிகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்ததால், இச்சூழ்நிலையில் இங்கிலாந்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும்.
இரண்டு அரையிறுதிப் போட்டிகளுமே எவ்வித முடிவும் இன்றி கைவிடப்பட்டால், சூப்பர் 8 சுற்றில் முதலிடம் பிடித்த தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.வரலாற்றை திருப்பி பார்த்தால், 2022 உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்து, இந்தியாவை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது. இதற்குப் பதிலடியாக, 2024-ல் இந்தியா அரையிறுதியில் இங்கிலாந்தைப் பழிதீர்த்து, பின்னர் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது.