மும்பை: 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் இந்த முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.
டாஸ் வென்ற பிறகு பேசிய இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் கூறுகையில், ஆடுகளம் விளையாடுவதற்குச் சிறப்பாகத் தெரிகிறது. பந்துவீச்சில் சிறப்பான தொடக்கத்தை அமைக்க விரும்புகிறோம். இந்த மைதானத்தில் விளையாடி எங்களை விட இந்திய அணிக்கு அதிக அனுபவம் உள்ளது. டி20 கிரிக்கெட்டில் எப்போது வேண்டுமானாலும் ஆட்டத்தின் போக்கு மாறலாம். இந்திய ரசிகர்களின் சத்தத்தைக் குறைக்கும் வகையில் எங்கள் ஆட்டம் இருக்கும் என நம்புகிறேன். அணியில் ஒரு மாற்றமாக ரேஹானுக்குப் பதிலாக ஜேமி ஓவர்டன் சேர்க்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார்.

இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசுகையில், டாஸ் வென்றிருந்தால் நாங்களும் முதலில் பேட்டிங் செய்யவே விரும்பினோம். இது ஒரு பெரிய அரையிறுதிப் போட்டி. ஆடுகளம் மிகச் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக மைதானப் பராமரிப்பாளர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பனியின் தாக்கம் அதிகமாக இருக்காது என நம்புகிறோம். கடந்த போட்டியில் வெற்றி பெற்ற அதே அணியுடன் எந்த மாற்றமும் இல்லாமல் களமிறங்குகிறோம் என்று தெரிவித்தார். இந்திய அணியில் குல்தீப் யாதவ் சேர்க்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அணியில் எந்த மாற்றமும் இல்லை என சூர்யகுமார் அறிவித்தார்.
மும்பை வான்கடே மைதானத்தில் லீக் சுற்றின் போது இருந்ததை விட சற்று வெப்பம் அதிகமாக உணரப்படுகிறது. மைதானத்தின் நேர் திசையில் 75 மீட்டர் தூரமும், பக்கவாட்டுத் திசைகளில் 65 மீட்டர் தூரமும் எல்லைகளாக உள்ளன. பனிப்பொழிவைக் கட்டுப்படுத்துவதற்காக மைதானத்தில் சிறப்பு ரசாயனம் தெளிக்கப்பட்டுள்ளது.
வரலாற்று ரீதியாக வான்கடே ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்குச் சற்று ஒத்துழைக்கக்கூடியது. ஆனால் இன்றைய போட்டிக்காக ஆடுகளம் சற்று கடினத்தன்மையுடன் தயார் செய்யப்பட்டுள்ளது. ஆடுகளத்தில் சற்று புற்கள் விடப்பட்டுள்ளதால், பந்து பேட்டிற்குச் சிறப்பாக வரும் என ஆடுகளக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முக்கியமான போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. முந்தைய நாக் அவுட் போட்டியில் வெற்றி வாகை சூடிய அதே பதினொரு வீரர்களுடன் இந்திய அணி களமிறங்குகிறது. மறுபுறம் இங்கிலாந்து அணியில் சுழற்பந்து வீச்சாளர் ரேஹானுக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஜேமி ஓவர்டன் அணியில் இணைந்துள்ளார்.
இந்திய அணி: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் பட்டேல், அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.
இங்கிலாந்து அணி: ஃபில் சால்ட், ஜோஸ் பட்லர், ஹாரி புரூக் (கேப்டன்), ஜேக்கப் பெத்தேல், டாம் பான்டன், சாம் கர்ரன், வில் ஜாக்ஸ், ஜேமி ஓவர்டன், லியாம் டாசன், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித்.