மும்பை: வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 253 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சனின் சிறப்பான பேட்டிங் மற்றும் மிடில் ஆர்டர் வீரர்களின் அதிரடியால் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு முற்றிலும் சிதறடிக்கப்பட்டது.
குறிப்பாக இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சை இந்திய அணி நாலாபுறமும் பறக்கவிட்டது. இதை அடுத்து ஆர்ச்சர், டி20 உலகக் கோப்பை நாக் அவுட் போட்டிகளில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையை அவர் படைத்துள்ளார்.

இந்த முக்கியமான அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா 9 ரன்களில் வில் ஜாக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஆனால், மற்றொரு தொடக்க வீரரான சஞ்சு சாம்சன் ஆட்டத்தின் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.
அபிஷேக் சர்மாவின் வெளியேற்றத்திற்குப் பிறகு களமிறங்கிய இஷான் கிஷன், சாம்சனுக்கு சிறப்பான ஒத்துழைப்பு அளித்தார். இந்த ஜோடி இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தது. இஷான் கிஷன் 18 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் உட்பட 89 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்த பிறகு கேப்டன் சூர்யகுமார் யாதவ் 11 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதன் பின்னர் சிவம் துபே மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினர். சிவம் துபே 25 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
இறுதி கட்டத்தில் களமிறங்கிய திலக் வர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் அதிரடியாக மட்டையை சுழற்றினர். திலக் வர்மா வெறும் 7 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 21 ரன்கள் எடுத்து ஜோஃப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியா 12 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 27 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ரன் அவுட் ஆனார். அனைத்து பேட்ஸ்மேன்களும் சிறப்பான பங்களிப்பை அளித்ததால் இந்திய அணி 20 ஓவர்களில் 253 ரன்கள் என்ற பெரிய ஸ்கோரை பதிவு செய்தது.

இந்திய பேட்ஸ்மேன்களின் அதிரடியால் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் கடுமையாக திணறினர். குறிப்பாக, அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்கள் பந்துவீசி 61 ரன்களை வாரி வழங்கி 1 விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினார். இதன் மூலம் டி20 உலகக் கோப்பை நாக் அவுட் போட்டிகளில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையை அவர் படைத்துள்ளார்.
இதற்கு முன் 2021 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் 60 ரன்கள் வழங்கியதே மோசமான சாதனையாக இருந்தது. 2012 இறுதிப்போட்டியில் இலங்கை வீரர் மலிங்கா 54 ரன்களும், நடப்பு 2026 தொடரின் முதல் அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவின் மார்கோ ஜான்சன் 53 ரன்களும் விட்டுக்கொடுத்திருந்தனர்.

இந்த வரிசையில் இங்கிலாந்தின் சாம் கர்ரனும் இந்த போட்டியில் 4 ஓவர்களில் 53 ரன்களை வழங்கியுள்ளார். ஸ்பின்னர்களான வில் ஜாக்ஸ் மற்றும் அடில் ரஷித் ஆகியோர் மட்டுமே தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.