மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் காயம் காரணமாக போட்டியிலிருந்து பாதியில் வெளியேறினார். இந்திய அணிக்கு மீண்டும் பேட்டிங் செய்வதற்காக மட்டும் களத்திற்கு திரும்பி அரை சதம் அடித்தார்.
எனினும் ரிஷப் பண்ட் ரன் எடுக்க ஓட முடியாமல் தடுமாறினார். பண்ட்க்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் அவர் ஆறு வாரம் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்திருக்கின்றனர்.

இதனால் ரிஷப் பண்ட் எஞ்சியிருக்கும் தொடரில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனினும் இந்திய அணியின் பேட்டிங் தேவைப்பட்டால், மட்டும் ரிஷப் பண்ட் களத்திற்கு வருவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த தருணத்தில் பண்ட்க்கு பதிலாக ஐந்தாவது டெஸ்டில் இசான் கிஷன் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இம்முறையும் இசான் கிஷனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக தமிழக கிரிக்கெட் வீரர் நாராயன் ஜெகதீசன் சேர்க்கப்பட்டிருக்கின்றார். 29 வயதான நாராயன் ஜெகதீசன் முதல் தர போட்டிகளில் 52 ஆட்டங்களில் விளையாடி மொத்தமாக 3373 ரன்கள் அடித்திருக்கின்றார்.
இதில் அவருடைய அதிகபட்ச ஸ்கோர் 321 ரன்கள் ஆகும். நாராயன் ஜெகதீசன் 10 சதம், 14 அரை சதம் என 47 சராசரி வைத்திருக்கின்றார். தமிழ்நாட்டில் முன்னணி பேட்ஸ்மேன் ஆகவும் விக்கெட் கீப்பராகவும் விளங்கிய நாராயன் ஜெகதீசன் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காகவும், கேகேஆர் அணிக்காகவும் விளையாடியுள்ளார்.பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்ட நிலையில், தற்போது அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
நாராயன் ஜெகதீசன் சேர்க்கப்பட்டிருப்பதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்து இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் தேர்வான வீரர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்திருக்கின்றது. ஏற்கனவே வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்சன் உள்ள நிலையில் தற்போது நாராயன் ஜெகதீசன் ஐந்தாவது டெஸ்ட்க்கு மாற்றுவீராக இணைய உள்ளார். எனினும் துருவ் ஜூரல் ஏற்கனவே அணியில் உள்ள நிலையில் நாராயன் ஜெகதீசன் ஒரு முன்னெச்சரிக்கைக்காக அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.