கொல்கத்தா: இந்திய டெஸ்ட் அணியில் பல ஆண்டுகால எதிர்பார்ப்புக்குப் பிறகு இடம்பிடித்திருக்கும் அபிமன்யு ஈஸ்வரன் குறித்து அவரது தந்தை பேட்டி அளித்துள்ளார். அதில், தனது மகன் ஆடம்பரமாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாத வீரர்; அதனாலேயே அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை; அதுவே அவருக்கு எதிராக அமைந்துவிட்டது என இந்திய தேர்வுக் குழுவை சாடி இருக்கிறார்.
அபிமன்யு ஈஸ்வரன் மேற்கு வங்காள அணிக்காக விளையாடி வருகிறார். இவர் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். நீண்ட காலமாகவே மேற்கு வங்காள அணியில் ரஞ்சி டிராபி போட்டியில் அதிக ரன் குவித்த வீரராக இருந்து வருகிறார். ஆனால், அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் அழைப்பு விடுக்கப்படவில்லை.

அதேசமயம், இந்தியா 'ஏ' அணியில் தொடர்ந்து இடம்பிடித்து வந்தார். இப்போது கூட இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்தியா 'ஏ' அணிக்கு கேப்டனாகவும் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில், அவருக்கு கிடைத்த வாய்ப்பு குறித்து அவரது தந்தை ரங்கநாதன் பேட்டி அளித்திருக்கிறார்.
"அபிமன்யு எப்போதோ இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு பெற்றிருக்க வேண்டும். ஐபிஎல் போட்டியில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருந்தால் இது எப்போதோ நடந்திருக்கும். இந்தத் தொடர் அதிக பார்வையாளர்களைக் கொண்டிருக்கும் நிலையில், இது மிகப்பெரிய வித்தியாசத்தை அவரது கிரிக்கெட் வாழ்வில் ஏற்படுத்தியிருக்கும். அபிமன்யு தன்னை ஆடம்பரமாக வெளிப்படுத்திக் கொள்ளும் வீரர் இல்லை. சதம் அடித்த பிறகு மைதானத்தைச் சுற்றி ஓடிவரும் வீரர் இல்லை. அதுவே அவருக்கு எதிராக திரும்பிவிட்டது."
"அபிமன்யு நிலையாக ரன் குவிக்கக்கூடிய வீரர். 101 முதல் தரப் போட்டிகளில் 7,674 ரன்கள் சேர்த்திருப்பதை வைத்தே நீங்கள் புரிந்து கொள்ளலாம். அவரது பேட்டிங் சராசரி 48.87. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய மண்ணில் அவரது அனுபவம் மற்றவர்களை விட அவரை முன்னிலைப்படுத்தி காட்டும்."
"அபிமன்யு காலை 5:30 மணிக்கு எழுந்து வேகப்பந்துவீச்சாளர்களை சந்திப்பார். இரண்டு டஜன் டியூக் பந்துகளை விடாமல் வீசச் செய்து பயிற்சி மேற்கொள்கிறார். இங்கிலாந்து சூழ்நிலைக்கு ஏற்ப அதிகமாக பவுன்ஸ் ஆகும் வகையில் பச்சை நிற கிரிக்கெட் பிட்சில் சிவப்பும் மண் இருக்கும் வகையில் பிட்ச் அமைத்து பயிற்சி செய்கிறார்."
"நான்காவது மற்றும் ஐந்தாவது நாட்களில் சுழற்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதற்காக சிறப்பு பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். இங்கிலாந்து அணியில் இருக்கும் ஒவ்வொரு பந்துவீச்சாளரைப் பற்றியும் அவர் தெரிந்து கொண்டு வருகிறார். அதன் மூலம் ஒவ்வொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள அவர் தன்னை தயார்படுத்திக் கொண்டு வருகிறார்," என்று கூறினார் அபிமன்யுவின் தந்தை.
இவ்வளவு பயிற்சிகளை முன் கூட்டியே செய்யும் அபிமன்யு ஈஸ்வரனுக்கு இந்திய டெஸ்ட் அணியின் பிளேயிங் லெவனில் இடம் கிடைக்குமா என்பது தற்போதைய கேள்வியாக உள்ளது.