மும்பை: இந்திய டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு திரும்பி விட்ட நிலையில், தற்போது யார் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்படுகிறார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது. விவிஎஸ் லக்ஷ்மன் இந்திய டெஸ்ட் அணி மற்றும் இந்தியா 'ஏ' அணி விளையாடிய பயிற்சிப் போட்டியின் போது மைதானத்தில் இருந்தார்.
எனவே, அவர்தான் இந்திய டெஸ்ட் அணியின் தற்காலிக பயிற்சியாளரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் பிசிசிஐ சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு, விவிஎஸ் லக்ஷ்மன் தற்காலிக பயிற்சியாளர் இல்லை எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால், எதற்காக அவர் இந்திய டெஸ்ட் அணி மற்றும் இந்தியா 'ஏ' அணி விளையாடிய பயிற்சிப் போட்டியின் போது அங்கு இருந்தார் என்று விளக்கம் அளிக்கப்படவில்லை.

மேலும், கௌதம் கம்பீர் எப்போது திரும்புவார் என்ற கேள்விக்குப் பதிலளித்த பிசிசிஐ அதிகாரி ஒருவர், "முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக கௌதம் கம்பீர் திரும்பி விடுவார். அவரது தாயார் தற்போது ஐசியூவில் இருந்தாலும், மருத்துவர்கள் அவரது உடல்நிலை முன்னேறி வருவதாக கூறியிருக்கின்றனர். எனவே கௌதம் கம்பீர் சில நாட்களில் மீண்டும் இங்கிலாந்து செல்வார்," எனக் கூறியிருக்கிறார்.
ஜூன் 20 அன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் தலைமை பயிற்சியாளர் கம்பீர் இல்லாமல் இந்திய அணி ஆடுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. ஏனெனில் இந்திய அணியின் கேப்டனாக மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ரோகித் சர்மா ஓய்வு பெற்று விலகி இருக்கிறார். மூத்த வீரரான விராட் கோலியும் ஓய்வு அறிவித்து விலகிவிட்டார்.
தற்போது இரண்டு முன்னாள் கேப்டன்களும் அணியில் இல்லாத நிலையில் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டிருக்கிறார். புதிய கேப்டனுக்கு பல்வேறு வகைகளிலும் ஆலோசனை அளித்து அவரை வழிநடத்த வேண்டிய முக்கியமான பொறுப்பு தலைமைப் பயிற்சியாளருக்கு இருக்கிறது. அந்தப் பணியை உதவி பயிற்சியாளர்களோ மற்றவர்களோ செய்தால், அதனால் குழப்பங்கள் நேரிடலாம்.
எனவே நிச்சயமாக முதல் டெஸ்ட் போட்டியின் போது தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், சுப்மன் கில்லின் அருகில் இருக்க வேண்டும். ஒருவேளை கம்பீரால் வர முடியவில்லை என்றால், அவருக்கு இணையாகப் பார்க்கப்படும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் விவிஎஸ் லக்ஷ்மன் தற்காலிக பயிற்சியாளராக செயல்பட வாய்ப்பு உள்ளது.
லக்ஷ்மனுக்கு இதுவரை அதிகாரப்பூர்வமாக பொறுப்பு அளிக்கப்படவில்லை என்றாலும், கௌதம் கம்பீர் வரமுடியாவிட்டால் அந்த இடைவெளியை நிரப்புவதற்காக முன்னெச்சரிக்கையாக அனுப்பப்பட்டு இருக்கிறார். துணைப் பயிற்சியாளர் ரயன் டென்டூஷ்கேட் இருந்தாலும், அவரை நம்பாமல் விவிஎஸ் லக்ஷ்மனை பிசிசிஐ இங்கிலாந்துக்கு அனுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்திய அணியின் பிளேயிங் லெவனை முடிவு செய்வதில் தான் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. விராட் கோலி பேட்டிங் செய்த நான்காம் வரிசையில் யார் இறங்கப் போகிறார்கள்? ரோகித் சர்மாவின் துவக்க வீரர் என்ற இடத்தில் யார் பேட்டிங் செய்யப் போகிறார்கள்? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. மேலும் வேகப்பந்துவீச்சாளர்களாக யார், யாரை அணியில் தேர்வு செய்யலாம் என்ற கேள்விகளும் உள்ளன.