லண்டன்: இந்திய டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், மூத்த வீரர்கள் இல்லாத இந்திய டெஸ்ட் அணிக்கு அறிவுரைகள் வழங்கினார். அப்போது மூன்று வீரர்கள் மட்டுமே 296 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருந்ததையும், அவர்கள் இல்லாத அணி எப்படி செயல்படப் போகிறது என்பது குறித்தும் பேசி இருக்கிறார்.
இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி என மூன்று அனுபவ வீரர்கள் அடுத்தடுத்து ஓய்வை அறிவித்தனர். இவர்கள் மூவரும் சேர்ந்து மொத்தம் 296 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளனர். இத்தனை அனுபவமிக்க வீரர்கள் ஒரே நேரத்தில் அணியில் இருந்து வெளியேறி இருக்கும் நிலையில், அவர்கள் இல்லாத அணி அனுபவமற்ற அணியாகவே காட்சி தருகிறது. ரவீந்திர ஜடேஜா மட்டுமே இந்த அணியில் அதிக அனுபவம் மிக்க வீரராக இருக்கிறார்.

இந்த நிலையில், இளம் இந்திய வீரர்கள் மத்தியில் பயிற்சிக்கு முன்னதாக கௌதம் கம்பீர் பேசினார். அப்போது, "நான் உங்களிடம் சொல்ல வேண்டும் என விரும்புவது: நமது அணியை இரண்டு விதமாக நாம் பார்க்கலாம். மூன்று அனுபவ வீரர்கள் நம்மிடம் இல்லை என்று பார்ப்பது ஒன்று. இல்லையெனில், சிறப்பான ஒரு விஷயத்தைச் செய்வதற்கு அற்புதமான வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றும் இதை பார்க்கலாம்.
இந்த அணியை பாருங்கள்; வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கை, ஆர்வம், அர்ப்பணிப்பு, ஏதேனும் ஒன்றை சிறப்பாக செய்ய வேண்டும் என்ற முயற்சி எல்லாம் உள்ளது. நாம் தியாகம் செய்தால், நமக்கு உகந்த வசதியான இடத்தை விட்டு வெளியே வந்தால், போராட வேண்டும் என்று நினைத்தால், ஒவ்வொரு நாளும் அல்ல, ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு மணி நேரத்திலும், ஒவ்வொரு பந்திலும் போராட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தால், நமக்கு மறக்க முடியாத ஒரு சுற்றுப்பயணம் அமையும்.
நாம் இன்றிலிருந்து அதைத் தொடங்குவோம். நாட்டுக்காக விளையாடுவதை மகிழ்ச்சியுடன் செய்வோம். அதைவிட பெரிய கௌரவம் வேறு எதுவும் இல்லை. ஒவ்வொரு பயிற்சியையும் அர்த்தமுள்ளதாக மாற்றுவோம். அதற்கு ஏற்றவாறு பயிற்சி செய்வோம். நம்மை நாமே அழுத்தத்துக்கு உள்ளாக்கி ஆடுகளத்துக்கு செல்வதற்கு தயார் செய்வோம். பந்துவீச்சாளர்களோ, பேட்ஸ்மேன்களோ அழுத்தத்திற்கு இடையே எப்படி விளையாடப் போகிறோம் என்பதை இங்கேயே அறிந்து கொள்ள முயற்சி செய்வோம். ஒரு நோக்கத்துடன் ஒவ்வொரு பந்தையும் விளையாடுவோம்" என்றார் கம்பீர்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி செட்டிங்கில் மைதானத்தில் ஜூன் 20 அன்று துவங்க உள்ளது.