லீட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முடிவில் மூன்று இந்திய வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் அமைப்பு (ICC) தண்டனை வழங்க வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. அது உண்மையாகும் வாய்ப்பும் அதிகமாகவே உள்ளது. இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மற்றும் துணை கேப்டன் ரிஷப் பண்ட் என மூன்று முக்கிய வீரர்களுக்குத் தண்டனை அளிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. அவர்கள் அப்படி என்ன செய்தார்கள் என்று பார்க்கலாம்.
முதலில் கேப்டன் சுப்மன் கில் கவனக்குறைவாக ஒரு தவறை செய்தார். அதாவது, டெஸ்ட் போட்டிகளில் வெள்ளை நிற உடைதான் அணிய வேண்டும் என்ற விதி உள்ளது. அது ஷூ மற்றும் சாக்ஸ் ஆகியவற்றிற்கும் பொருந்தும். அவர் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்தபோது கருப்பு நிற சாக்ஸை அணிந்து விளையாடினார். அதைப் பார்த்த சில ரசிகர்கள் சுட்டிக்காட்டி அவர் விதிமீறலில் ஈடுபட்டிருப்பதாகக் கூறினர். இதன் காரணமாக சுப்மன் கில்லுக்கு முதல் போட்டியின் முடிவில் அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

அடுத்து இந்திய அணியின் துணை கேப்டன் ரிஷப் பண்ட் அம்பயருக்கு எதிராக நடந்துகொண்டார். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி பந்துவீசிக்கொண்டிருந்தபோது பந்து சரியாகச் செல்லவில்லை. இதை அடுத்து, இந்தப் பந்தை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை இந்திய அணி சார்பில் வைக்கப்பட்டது.
முதலில் பும்ரா அந்தக் கோரிக்கையை வைத்தார். அதை ஏற்க அம்பயர் மறுத்துவிட்டார். அடுத்து ரிஷப் பண்ட் அதே கோரிக்கையை வைத்தார். அப்போதும் அதை ஏற்க அம்பயர் மறுத்துவிட்டார். அதற்கு அடுத்த ஓவரில் மீண்டும் பந்து மேலே எழும்பாமல் சென்றது.
இதைப் பார்த்த ரிஷப் பண்ட் அதிருப்தி அடைந்து பந்தை எடுத்துக்கொண்டு அம்பயரிடம் சென்று "பந்து மோசமான நிலையில் இருக்கிறது, மாற்ற வேண்டும்" என்றார். அப்போதும் அம்பயர் அதை ஆய்வு செய்துவிட்டு, "பந்தை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை" என்றார். இதை அடுத்து கோபமடைந்த ரிஷப் பண்ட், அம்பயர் வாங்கியவுடன் அதை கீழே தூக்கி எறிந்துவிட்டு கோபமாக நடந்து சென்றார்.
அதைப் பார்த்த இங்கிலாந்து ரசிகர்கள் மைதானத்தில் "ஓஓஓ" என்று கோஷமிட்டனர். அம்பயருக்கு எதிராக அவமரியாதையாக நடந்துகொண்டதால் துணை கேப்டன் ரிஷப் பண்ட்டுக்கு அபராதம் விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
அதேபோல, வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஹாரி புரூக் பேட்டிங் செய்தபோது எந்த அவசியமும் இன்றி அவரை சீண்டும் வகையில் நடந்துகொண்டார். ஹாரி புரூக் அவரது ஓவரில் பவுண்டரிகளை அடித்ததற்காக இவ்வாறு செய்தார். எதிரணி பேட்ஸ்மேனை சீண்டும் வகையில் நடந்துகொண்டதற்காக முகமது சிராஜுக்கும் அபராதம் விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த மூன்று வீரர்களும் இந்திய அணிக்கு முக்கியமானவர்கள் என்னும் நிலையில், பல்வேறு தவறுகளைச் செய்து விதிமுறைகளில் ஈடுபட்டிருக்கின்றனர். முதல் போட்டியின் முடிவில் மேட்ச் ரெஃப்ரி இவர்கள் மீதான புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது.