பிர்மிங்காம்: இந்தியா - இங்கிலாந்து இடையேயான 'டெண்டுல்கர்-ஆண்டர்சன் கோப்பை' டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் இதுவரை நான்கு இன்னிங்ஸ்களில் 356 ரன்கள் சேர்த்து இருக்கிறார். அவரது பேட்டிங் சராசரி 178 என்பதாக உள்ளது. இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 184 ரன்கள் சேர்த்த அவர், இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக ஆடி 88 ரன்கள் எடுத்திருந்தார்.
டெஸ்ட் போட்டி என்றாலும், ஒருநாள் போட்டி அளவுக்கு அவர் அதிரடியாகவே ஆடி வருகிறார். சிக்ஸர்களை பறக்க விட்டு இருந்தார். எனவே அவரை ஐபிஎல் தொடரில் விளையாட வைக்கலாம், அனைத்து அணிகளும் அவரை வாங்க போட்டி போடும் என சில ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். ஆனால், ஐபிஎல் விதிப்படி அவரால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க முடியாது.

2025 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக மெகா ஏலம் நடந்தது. அனைத்து அணிகளும் மிகச்சிறந்த வீரர்களை மட்டுமே தக்கவைத்துக் கொண்டு மற்றவர்களை இந்த மெகா ஏலத்தில் வாங்கினார்கள். இந்த ஏலத்திற்கு முன்னதாக பிசிசிஐ (BCCI) சில விதிமுறைகளை அமல்படுத்தியது. அதன்படி, வெளிநாட்டு வீரர்கள் இந்த மெகா ஏலத்தில் தங்கள் பெயரைப் பதிவு செய்யவில்லை என்றால், அவர்களால் அடுத்த இரண்டு ஆண்டுகள் நடைபெறும் ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கேற்க முடியாது.
ஜேமி ஸ்மித் தனது பெயரை 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் பதிவு செய்யவில்லை. எனவே, அவரால் அடுத்த ஆண்டு நடைபெறும் 2026 ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கேற்க முடியாது. ஜேமி ஸ்மித் சர்வதேச போட்டிகளில் அதிரடியாக ஆடினாலும், 2026 ஐபிஎல் தொடரில் அவரால் பங்கேற்க முடியாது.
வெளிநாட்டு வீரர்கள் இதற்கு முன்பு மெகா ஏலத்தில் தங்கள் பெயரைப் பதிவு செய்யாமல், மினி ஏலத்தில் மட்டும் பங்கேற்று வந்தனர். அதன் மூலம் மினி ஏலத்தில் அவர்களுக்கு அதிக போட்டி இருக்காது என்பதால், அதிக சம்பளம் கிடைத்து வந்தது. ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் ஆடிவிட்டு 15 கோடி, 20 கோடி என மிகப் பெரிய சம்பளத்தைப் பெற்று வந்தார்கள். இதைத் தடுப்பதற்காகவே பிசிசிஐ இந்த விதியை அமல்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாகத்தான் அதிரடியாக ரன் குவித்து வரும் ஜேமி ஸ்மித் ஐபிஎல் தொடரில் உடனடியாகப் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.